Tuesday, October 20, 2009

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


மேஷ ராசி


நல்லதை வரவேற்கும் உங்களுக்கு 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலகட்டத்தில் ராகுவும் கேதுவும் அனைத்து வகைகளிலும் உதவுவார்கள்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் அமர்ந்து, உங்களை ஒரு வேலையையும் முழுமையாக பார்க்க விடாமல் தடுத்த ராகு பகவான், இப்போது 9-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். முடியாத காரியங்களையும் இனி முடிப்பீர்கள். உங்களது திறமை வெளிப்படும்.

குடும்பத்தாருடன் இருந்த சண்டை- சச்சரவு நிலை மாறும். வீட்டார் உங்களின் ஆலோசனையை ஏற்பர். தள்ளிப்போன சுபகாரியம் நிகழும்.

தம்பதிக்குள் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். குழந்தை இல்லாமல் ஏங்கிய தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். என்ன உழைத்தும் கையில் காசு பணம் தங்கவில்லையே எனும் நிலை மாறி சேமிக்கத் துவங்குவீர்கள்.

ராகு பகவான் 27.10.2009 முதல் 28.12.2009 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியான உத்திராட நட்சத்திரத்தில் செல்லும் இந்தக் காலகட்டத்தில், மகளுக்கு திருமணம் கைகூடி வரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். அவர்களின் கல்வி,வேலை, திருமண முயற்சி வெற்றி பெறும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் உதவுவர். வீடு- வாகன முயற்சிகள் பலிதமாகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால், இந்தக் காலகட்டத்தில் மருத்துவச் செலவு, சிறு விபத்து, ஏமாற்றங்கள், உறவினர் இடையே மனக்கசப்பு ஆகியவை வந்து நீங்கும்.

பூர்வீக சொத்தை மாற்றி அமைப்பீர்கள். அனைவரும் வியக்கும்படி உங்களின் வாழ்க்கைத் தரம் உயரும். ஆடை- ஆபரணங்கள் சேரும். ராகு 9-ஆம் வீட்டில் அமர்வதால் தந்தையின் உடல்நலனில் சிறு பாதிப்பு வந்துபோகும். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சண்டையைக் குறையுங்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். அரசியல் வாதிகள் சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவார்கள். எவரையும் விமர்சிக்க வேண்டாம்.

வியாபாரத்தில் பழைய சரக்குகளை புது யுக்தியால் விற்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பர். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். இரும்பு, கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், ரசாயன வகைகள் ஆகியவற்றால் ஆதாயம் உண்டு. அரசு காரியத்தில் அலட்சியம் வேண்டாம். உத்தியோகத்தில் உங்களை தரக் குறைவாக நடத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி உயர்வு தேடி வரும். வேலைச் சுமை குறையும். கலைத்துறையினரது படைப்புகள் பேசப்படும். பெண்களுக்கு தோஷம் நீங்கி கல்யாணம் நடைபெறும். பாதியில் நின்ற கல்வியை தொடர்வர். மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தி யாகும். விளையாட்டுப் போட்டியில் பரிசு,பாராட்டு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை ராசிக்கு 4-வது வீட்டில் அமர்ந்து உங்களை அல்லல்படுத்திய கேது பகவான் இப்போது 3-ஆம் வீட்டில் முகமலர்ச்சியுடன் அமர்கிறார்.

தம்பதிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். தாயார் மற்றும் இளைய சகோதரருடனான கருத்து மோதல் நீங்கும். நீங்கள் சற்று அனுசரித்துப் போகவும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய உங்கள் யோகாதிபதி குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் வீட்டில் சுபகாரியங்கள் நிகழும். குழந்தை பாக்கியம் கிட்டும். பெரிய பதவிகள் தேடி வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் வீண் அலைச்சல், காரியத் தடை ஆகியன ஏற்பட்டு விலகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். தாழ்வு மனப்பான்மை விலகும்.

சொந்த ஊரில் மதிப்பு உயரும். ஆடம்பரச் செலவைக் குறைப்பீர்கள். வெளிநாட்டில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. உயர்ரக வாகனங்கள் வாங்குவீர்கள். தங்க நகை சேரும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி, விலகியே இருந்த உங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதுடன், பெயர், புகழை வாரி வழங்கும்.


ரிஷப ராசி

எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பவர் நீங்கள். 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகுவும் கேதுவும் இணைந்து எப்படிப்பட்ட பலன்களை தரப்போகின்றனர்... பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் அமர்ந்து கொண்டு, கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டு, கையில் காசு- பணத்தை தங்க விடாமல் செய்த ராகு பகவான், இப்போது 8-ல் சென்று மறைகிறார். இதனால் அல்லல் பட்ட உங்கள் மனம் அமைதியாகும்.

திக்கித் திணறிய நீங்கள், திசையறிந்து பயணிப்பீர்கள். தடைபட்ட காரியங்கள் நடந்தேறும். தந்தையின் உடல் நலம் சீராகும். தந்தை வழி சொத்தில் இருந்த சிக்கல் தீரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் ஆச்சர்யப்படும்படி சாதிப்பீர்கள். தம்பதிக்குள் சிறு விவாதங்கள் வந்து நீங்கும். உறவினர்கள், நண்பர்களிடம் குடும்ப விஷயங்களைச் சொல்ல வேண்டாம். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப் பையில் கட்டி வந்து நீங்கும். பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சுகாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் சொத்துப் பிரச்னை நீங்கும். தாயாரின் நோய் குணமாகும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் சுறுசுறுப்பாவீர்கள். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். பழுதான டி.வி. முதலான பொருட்களை மாற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் மன உளைச்சல், பேச்சால் பிரச்னை ஆகியன வந்து நீங்கும். அரசு விவகாரத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும்.

பிள்ளைகள், குடும்ப சூழ்நிலையைப் புரிந்து நடப்பர். உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். புதிய வீடு மாறுவீர்கள். வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். வெளிவட்டார விமர்சனத்தால் கவலை வேண்டாம்; உங்கள் புகழ் கூடும். உணவில் கட்டுப்பாடு தேவை. அசைவ, கார உணவைத் தவிர்த்து, காய்கறி, கீரை வகைகளைச் சேருங்கள். சிறு விபத்து ஏற்பட்டு, பிறகு சரியாகும்.

வியாபாரத்தில் பாக்கியை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்கள் ஆதரிப்பர். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எவரை நம்பியும் பெரிய முதலீடுகளைப் போடாதீர்கள். ஷேர், புரோக்கரேஜ், கமிஷன் வகைகள் ஆதாயம் தரும். பங்குதாரர்களிடையே நிலவிய கருத்து வேறுபாடு மறையும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் அடக்கு முறை மாறும். முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். சலுகை மற்றும் பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினரது திறமை வெளிப்படும். பரிசு, பணமுடிச்சு ஆகியன உண்டு. பெண்களுக்கு மனம் போல் மாங்கல்யம் வந்து சேரும்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு 2-வது வீட்டில் நுழைகிறார் கேது பகவான். சாதுர்யப் பேச்சால் சாதிப்பீர்கள். சில தருணத்தில் சொற் குற்றம், பொருட்குற்றத்தில் சிக்குவீர்கள். பல் வலி, கண் எரிச்சல் வந்து நீங்கும். அத்தியாவசிய செலவு அதிகரிக்கும். மகளின் திருமணப் பேச்சு இனிதே நிறைவேறும். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல், பெரிய மனிதர்களுடன் கருத்து வேறுபாடு ஆகியன வந்து நீங்கும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சிறு அறுவை சிகிச்சை, வீண் செலவு ஆகியன வந்து நீங்கும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் சகோதர வகையில் ஆதாயம் உண்டு. மனைவி வழி உறவினர் உதவுவர்.

எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும். விட்டுக்கொடுத்துப் போங்கள்.

இந்த ராகு, கேது பெயர்ச்சி உங்களுக்குப் புதிய அனுபவங்களைத் தருவதுடன், ஆன்மிகத்தில் அதிக நாட்டம் கொள்ளவும் வைக்கும்.

மிதுனம்

மனித நேயம் கொண்ட உங்களுக்கு ராகு-கேதுப் பெயர்ச்சி பல புதிய அனுபவங்களைத் தரப் போகிறது.

ராகுவின் பலன்கள்

இப்போது ராகு பகவான், ராசிக்கு 7-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். உங்களின் திறமையை நீங்களே தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். வீண் விவாதம், அலைச்சல், கோபதாபங்கள் அனைத்தும் குறையும். தம்பதிக்குள் மகிழ்ச்சி உண்டு. எனினும் களத்திர ஸ்தானமான 7-ஆம் வீட்டில் அமர்வதால் மனைவியுடன் சிறு பிரச்னைகள் ஏற்படும். மனைவிக்கு மருத்துவச் செலவு நேரும். அவரின் உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். எதையும் சுயமாக யோசித்து முடிவெடுங்கள். குழந்தை பாக்கியம் உண்டு. நண்பர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வருமானம் அதிகரிக்கும்; சேமிப்பும் கரையும். திடீர் பயணம் ஏற்படும்.

27.10.2009 முதல் 28.12.2009 வரை உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் இந்தக் கால கட்டத்தில் இளைய சகோதர வகையில் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. 29.12.2009 முதல் 5.9.2010 வரை பூர்வ புண்ணியாதிபதி சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு, கௌரவப் பதவி, வீடு, மனை மூலம் லாபம், புதிய வாகனம், மகளுக்கு திருமணம் அனைத்தும் உண்டாகும். 6.9.2010 முதல் 27.4.2011 வரை மூல நட்சத்திரத்தில் செல்வதால் குடும்பத்தில் குழப்பம், கருத்து மோதல், பணப் பற்றாக் குறை, மன வருத்தம் ஆகியன வந்து நீங்கும்.

பிள்ளைகள் உயர்கல்வியில் வெற்றி பெறுவர். அவர்களின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். பாதியில் நின்ற வேலையை முடிப்பீர்கள். பிரபலங்களின் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம். மதிப்பு- மரியாதை கூடும். பெண்களுக்கு கல்யாணத் தடைகள் நீங்கும். மாதவிடாய்க் கோளாறு, மன உளைச்சல் ஆகியன விலகும். வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் வந்து போகும். புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள் சிந்தித்து செயல்படுவது நல்லது.

வியாபாரப் போட்டிகளால் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் குறித்து யோசிப்பீர்கள். ரியல் எஸ்டேட், கட்டட வகைகளால் லாபம் பெறுவீர்கள். வேலையாட்களிடம் ரகசியங்களை வெளியிடாதீர்கள். பாக்கிகள் கைக்கு வரும். பங்குதாரர்களிடம் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. புது ஏஜென்ஸி எடுப்பீர்கள்.

உத்தியோகத்தில் மேலதிகாரியின் போக்கை அறிந்து நடப்பீர்கள். உங்களின் கடின உழைப்பால் பதவி உயர்வு அடைவீர்கள். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கலைத் துறையினர் போட்டி, பொறாமைகளுக்கு நடுவில் வெற்றி பெறுவர். கைத்தட்டலுடன், காசும் சேரும்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசியிலேயே வந்து அமருவதால் சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். இனி ஆக்க பூர்வமாக செயல்படுவீர்கள். குடும்பத்தாரைப் புரிந்து கொள்ளுங்கள். வருங்காலக் கவலை வந்து போகும். ராசிக்குள் கேது அமர்வதால் தலைச் சுற்றல், ஒற்றைத்தலைவலி, முன்கோபம் ஆகியன வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியுடன் கருத்து மோதல், வீண் செலவு வரும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அநாவசியமாக பிறரது விஷயங்களில் தலையிடாதீர்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பழைய கடனை நினைத்து அச்சப்படுவீர்கள். சகோதர வகையில் விட்டுக் கொடுங்கள். தியானம், யோகாவில் ஈடுபடுங்கள். புண்ணியத் தலம் செல்வீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிரம் காட்டுவது நல்லது.

இந்த ராகு-கேது மாற்றம், வேலைச் சுமை, விவாதம் ஆகியவற்றைத் தந்தாலும், விட்டுக் கொடுக்கும் குணத்தால் வெற்றியையும் தரும்.

கடகம்

வெளுத்ததெல்லாம் பால் என நினைப்ப வர்களே! இதுவரை எந்த வேலையையும் செய்ய விடாமல் முடக்கி வைத்த ராகுவும் கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உங்களுக்கு என்ன பலன்களை தரப் போகிறார்கள்..? பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்:

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 6-ஆம் இடத்தில் ஆற்றலுடன் வந்து அமர்கிறார். உங்களை எதிரியாகப் பார்த்த குடும்பத்தினர் பாசத்துடன் நடந்து கொள்வர். சந்தேகத்தால் பிரிந்த தம்பதி ஒன்று சேர்வீர்கள். மனைவியின் ஆரோக்கியம் கூடும்.

தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். எதிர்பார்த்த பணவரவு உண்டு. கடனில் ஒரு பகுதியைத் தீர்ப்பீர்கள். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். கண்-காது வலி நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வாகனம் வாங்குவீர்கள். வீடு- மனை அமையும். வி.ஐ.பி-களால் ஆதாயம் உண்டாகும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்பு, செலவு, மஞ்சள் காமாலை ஆகியன வந்து நீங்கும்.

பிள்ளைகள், உங்களின் அன்புக்குக் கட்டுப்படுவர். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பர். பணப் பற்றாக்குறையால் பாதியில் நின்ற கட்டடப் பணியை முடிப்பீர்கள். சொத்து வழக்குகள் சாதகமாகும். ஒதுங்கிய உறவினர்களும், நண்பர்களும் ஓடி வந்து உதவுவர்.

குழந்தை இல்லாத தம்பதிக்கு பிள்ளை பாக்கியம் உண்டாகும். வேலை இல்லாத நிலை மாறி, படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்கும். திருமணம் தடைப்பட்ட பெண்களுக்கு கல்யாணம் கூடி வரும்.

ஆடை- ஆபரணங்கள் சேரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் அன்பும், அரவணைப்பும் கிட்டும். சொந்த ஊரில் உங்களின் செல்வாக்கு உயரும்.

வியாபாரத்தில் புதிய யுக்திகளால் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கெமிக்கல், எண்ணெய் வித்துக்கள், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் உண்டு.

வேலையாட்கள் விசுவாசமாக நடப்பர். பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைக்கு ஒத்துழைப்பர். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் தொந்தரவு தந்த மேலதிகாரி இனி கனிவாகப் பேசுவார். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவர். கலைத்துறையினரது கற்பனைக்கு வரவேற்பு கிடைக்கும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து மன உளைச்சல், காரியத் தடைகள், நெஞ்சுவலி, தலைச் சுற்றல் ஆகியவற்றைத் தந்த கேது இப்போது 12-ல் அமர்கிறார். உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

முன்கோபம் விலகும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பிள்ளைகளின் கூடா பழக்கவழக்கங்கள் விலகும். மகனுக்கு தடைப்பட்ட திருமணம் முடியும்.

27.10.2009 முதல் 3.5.2010 வரை புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் மகான்கள், சித்தர்களின் ஆசீர்வாதம் கிட்டும். பிள்ளை பாக்கியம் உண்டு. வி.ஐ.பி-கள் அறிமுகமாவர்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் சோர்வு வந்து செல்லும். எவருக்கும் ஜாமீன் போட வேண்டாம்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் தாய்வழி உறவினர்கள் உதவுவர்.

பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். புண்ணிய திருத்தலங்களுக்கு அடிக்கடி செல்வீர்கள்.

இந்த ராகு-கேது மாற்றம், ஓய்ந்து போயிருந்த உங்களை உயர வைப்பதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

சிம்மம்

இதயத்திலிருந்து பேசும் உங்களுக்கு இந்த ராகு-கேது மாற்றம் எப்படி இருக்கும்... பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகு பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 5-ஆம் வீட்டில் அடியெடுத்து வைப்பதுடன், உங்களின் யோகாதிபதி செவ்வாயின் வீட்டில் அமர்வதால் குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். தம்பதிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். வீண் டென்ஷன், அலைச்சல், முன்கோபம் ஆகியன குறையும். மனைவி, பிள்ளைகள் கேட்டதை வாங்கிக் கொடுப்பீர்கள். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் திகழ்வீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவர். சொந்தங்கள் இடையே இருந்த மனக்கசப்பு விலகும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கௌரவப் பதவி தேடி வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் ஆடை- ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல்நிலை சீராகும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் மனக்கவலை, செலவு ஆகியன வந்து செல்லும்.

பிள்ளைகளின் போக்கில் கவனம் தேவை. மகனுக்கு நல்ல வேலை அமையும். குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. வாகன வசதி பெருகும். பூர்வீகச் சொத்து விஷயத்தில் அவசர முடிவு வேண்டாம். சிலர் பூர்வீகச் சொத்துகளை விற்க வேண்டி வரும். தாய்மாமன் வகையில் மோதல் வரும். பெண்களது திருமணத் தடை நீங்கும். அரசியல்வாதிகள் வீண் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது. சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத்தீரும். கடையை விரிவுபடுத்தி நவீனமயம் ஆக்குவீர்கள். பாக்கியை போராடி வசூலிப்பீர்கள். இரும்பு, உணவு, புரோக்கரேஜ் வகைகளால் லாபம் உண்டு. வேலையாட்கள் பொறுப்புடன் நடப்பர். உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். தேங்கிக் கிடந்த வேலைகளை உடனே முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உயரதிகாரிகள் இனி உங்களின் ஆலோசனையைக் கேட்பர். சம்பள உயர்வு வரும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். கலைத்துறையினரைப் பற்றிய கிசுகிசுக்கள் விலகும்.

கேதுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் அமர்ந்து விரயச் செலவு, வீண் அலைச்சல், தூக்கமின்மை ஆகியவற்றைத் தந்த கேது பகவான் உங்கள் ராசிக்கு லாப வீடான 11-ல் வந்து அமருகிறார். திடீர் யோகம், வெற்றி வாய்ப்பு ஆகியன தேடி வரும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை வங்கிக் கடனுதவியால் முழுமையாக முடிப்பீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய வேலை அமையும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் அலைச்சலுடன் ஆதாயம் உண்டாகும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பாராத பணவரவு உண்டு.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். உங்களை குறை சொல்லியவர்களே இனி உங்களைப் புகழ்ந்து பேசுவர். மறைமுக எதிரிகள் அடங்குவர். வியாபாரத்தை மாற்றுவீர்கள். அரசு கெடுபிடிகள் தளரும். வெளிநாட்டில் உள்ளவர்களால் உத்தியோகத்தில் உங்கள் மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுபடுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும். கவிதை, ஓவியம், இசைப் போட்டிகளில் பரிசு பெறுவர். உயர் கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும்.

இந்த ராகுவும் கேதுவும் துவண்டிருந்த உங்களுக்கு தெம்பையும், செல்வம் மற்றும் செல்வாக்கையும் அள்ளித் தரும்.

கன்னி

சகஜமாக பேசிப் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ராகு- கேது பெயர்ச்சியால் என்ன பலன்கள் ஏற்பட உள்ளன..?! பார்க்கலாம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 4-வது வீட்டில் அமர்வதால் மன நிம்மதி கிடைக்கும். பக்குவமாகப் பேசி தடைப்பட்ட காரியத்தை முடிப்பீர்கள்.

குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வீட்டில் தாமதமான சுபகாரியங்கள் ஏற்பாடாகும். விலகிப் போன உறவினர்கள், நண்பர்கள் வலிய வந்து பேசுவார்கள். தம்பதிக்குள் தாம்பத்தியம் இனிக்கும். உங்களுக்குள் கலகத்தை ஏற்படுத்தியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள்.

பூர்வீகச் சொத்துப் பிரச்னையை சுமுகமாக பேசித் தீர்ப்பீர்கள். இழுபறியான வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தாயாருக்கு ரத்த அழுத்தம், நரம்புக் கோளாறு ஆகியன வந்து நீங்கும். தாய்வழி உறவினர்களால் அலைச் சலும் மனக்கசப்பும் ஏற்பட்டு விலகும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் பணத் தட்டுப்பாடு, வழக்கில் பின்னடைவு, வீண் செலவு ஆகியன வந்து நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். தடைப்பட்ட வேலையை முடிப்பீர்கள். மகளுக்கு திருமணம் நடந்தேறும், மகனுக்கு வேலை கிடைக்கும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வாகன விபத்து, உத்தியோகத்தில் பிரச்னை ஆகியன வந்து செல்லும்.

5-ஆம் வீட்டை விட்டு ராகு விலகுவதால் பிள்ளைகளின் முரட்டு குணம் விலகும். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பண உதவியும் உண்டு.

கன்னிப் பெண்கள் தடைப்பட்ட உயர்கல்வியை தொடர்வார்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. யோகா, தியானம் செய்யுங்கள்.

பழைய வாகனத்தை விற்று விட்டு நவீன ரக வாகனத்தை வாங்குவீர்கள். எனினும் கவனம் தேவை. சிறு சிறு விபத்துகள் ஏற்படக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். கௌரவப் பதவி தேடி வரும். மாணவர்கள் மறதி நீங்கி, நல்ல மதிப்பெண் எடுப்பர்.

வியாபாரப் போட்டியை ராஜ தந்திரத்தால் வென்று லாபம் ஈட்டுவீர்கள். கனிவாகப் பேசி பாக்கியை வசூலிப்பீர்கள். வேலையாட்கள் உதவுவர். உணவு, சிமென்ட், புரோக்கரேஜ், மருந்து வகைகளால் இரட்டிப்பு லாபம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் கறாராகப் பேசி வேலையை விரைந்து முடிக்கப் பாருங்கள்.

உத்தியோகத்தில் கஷ்டமான வேலையைச் செய்து முடித்து சக ஊழியர்களை ஆச்சர்யப்படுத்துவீர்கள். மேலதிகாரியைப் பற்றி விமர்சிக்காதீர்கள். கலைத் துறையினரது எண்ணங்கள் பூர்த்தியாகும்.

கேதுவின் பலன்கள்

இப்போது கேது பகவான் 10-வது வீட்டில் வந்து அமர்வதால் தொட்ட காரியத்தை விரைந்து முடிக்க வைப்பார். வெளி நாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல் விலகும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் பண வரவு, பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் பழைய நண்பர்கள், உறவினர்களுடன் கருத்துமோதல் வந்து போகும். குடும்ப ரகசியங்களை வெளியில் சொல்லாதீர்கள்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் புதிய வாகனம் வாங்குவீர்கள். சொத்துத் தகராறு சுமுகமாக முடியும்.

உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். வேற்று இனத்தவர் உதவுவர். தந்தை வழி உறவினர்களால் செலவு, அலைச்சல் ஆகியன வந்து நீங்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

இந்த ராகு-கேதுப் பெயர்ச்சி உங்களின் பலம் மற்றும் பலவீனத்தை உணர வைப்பதுடன், புதிய பாதையில் பயணம் செய்ய வைக்கும்.

துலாம்

நீதி, நேர்மை, நியாயம் என தர்ம வழியில் செல்லும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகு-கேது பெயர்ச்சியின் பலன்கள் என்ன பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது ராசிக்கு 3-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். தடைப்பட்ட சுப காரியங்களை சிறப்பாக நடத்துவீர்கள். கடனை பைசல் செய்வீர்கள். குடும்பத்தினர் உங்களின் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தாயாரின் முகம் மலரும். பாதியில் நின்ற வேலையை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள். அவர்களது உயர்கல்வி மற்றும் வேலைக்காக வெளிநாடு அனுப்புவீர்கள். வீட்டில் பழுதான மின்னணு மற்றும் மின் சாதனங்களை மாற்றுவீர்கள். மனதுக்குள் கட்டிவைத்த கனவு வீட்டை, இப்போது நிஜமாகக் கட்டும் வாய்ப்பு அமையும். வங்கி கடனுதவியும் கிடைக்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவர். வி.ஐ.பி-கள், கல்வியாளர்கள், ஆன்மிக வாதிகள் என நட்பு வட்டம் விரியும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வீண் விரயம், சொத்துச் சிக்கல்கள் வந்து போகும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணப் புழக்கம் அதிகரிக்கும். வீட்டில் திருமணம் கூடி வரும். வாகனம் வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும் எதிர்மறை எண்ணங்களும் வந்து நீங்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு- மரியாதை உயரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல் மற்றும் செலவு நீங்கும். அடகில் இருந்த நகையை மீட்பீர்கள். நண்பர்கள் உதவுவர்.

பெண்கள், பாதியில் விட்ட படிப்பைத் தொடர்வார்கள். மாதவிடாய்க் கோளாறு, ரத்தசோகை நீங்கும்.

அரசியல்வாதிகள் வீண் விமர்சனங் களைத் தவிர்க்கவும். தலைமையின் ஆதரவு எப்போதும் உண்டு. வாகன கடனை அடைப்பீர்கள்.

வியாபாரப் போட்டியை புது யுக்தியால் வெல்வீர்கள். பாக்கியை கறாராகப் பேசி வசூலியுங்கள். ஷேர், புரோக்கரேஜ் ஆதாயம் தரும். புதிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்தியோகத்தில் உங்களை அலைக்கழித்த மேலதிகாரி இனி மதிப்பார். சக ஊழியர்கள் ஆதரிப்பர். கலைஞர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வர்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு 9-ஆம் இடத்தில் கேது வந்து அமர்கிறார். குடும்பத்தில் நிலவிய குழப்பம் அகலும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் எதிர்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. சொத்து வாங்குவீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தந்தையின் உடல்நிலை பாதிக்கும்.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி மற்றும் சகோதர வகையில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களது நிலையைப் புரிந்து கொள்வர்.

கேது 9-ஆம் வீட்டுக்கு வருவதால் தந்தைக்கு மருத்துவச் செலவு அதிகரிக்கும். அவருடன் விட்டுக் கொடுத்துப் போங்கள். தந்தை வழி சொத்துகளால் அலைச்சல்களும் செலவுகளும் ஏற்படும்.

பத்திரங்களை கவனமாகக் கையாளுங்கள். வேலையின்றித் தவித்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அயல்நாட்டு நிறுவன வாய்ப்பை ஏற்பீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

இதுவரை புதிய முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்ட ராகுவும் கேதுவும் இனி திடீர் யோகத்தையும் புகழையும் அள்ளித் தருவார்கள்.

விருச்சிகம்




சிறப்பு கட்டுரை

புன்சிரிப்பாலும் அறிவுபூர்வமான பேச்சாலும் பிறர் மனதில் எளிதாக நுழையும் உங்களுக்கு, ராகுவும் கேதுவும் அடுத்து வரும் ஒன்றரை வருடங்களுக்கு என்ன பலன்கள் தரப் போகிறார்கள் பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் வந்து அமர்கிறார். வருமானம் இருப்பினும் செலவும் ஏற்படும். பாதியில் நின்ற காரியங்கள் கைகூடும். குடும்பத்தில் சிறு பிரச்னை வந்தாலும் ஒற்றுமை பாதிக்காது. உடன்பிறந்தோருடன் இருந்த மனக்கசப்பு விலகும். பாசம் அதிகரிக்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்புற நடத்துவீர்கள். கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தைத் திருப்பித் தருவர். பால்ய நண்பர்கள் உதவுவர்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவர்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணவரவு அதிகரிக்கும். மே மாதம் முதல், வீடு, வாகனம் வாங்குவீர்கள். மனைவி வழியில் மகிழ்ச்சி தங்கும். எதிலும் வெற்றி உண்டு.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் டென்ஷன், அவமானம், வாகன விபத்து ஆகியன ஏற்படக்கூடும்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். மகளுக்கு வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் அமையும். மகனது உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னை நீங்கும். பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு.

2-ஆம் வீட்டில் ராகு நிற்பதால் எவரையும் தாக்கிப் பேசவேண்டாம். பத்திரங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. வழக்குகளில் இருந்த இழுபறி நிலை மாறும்.

பெண்களது தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வீடு- மனை வாங்குவதில் இருந்த சிக்கல் நீங்கும். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவர். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவர்.

வியாபார நஷ்டத்தில் இருந்து விடுபட புதிதாக யோசிப்பீர்கள். லாபம் உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். கடையை விரிவுபடுத்துவீர்கள். கான்ட்ராக்ட், கமிஷன் மூலம் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் இருந்த மோதல் போக்கு மறையும். மேலதிகாரி உங்களைப் புரிந்து கொண்டு புதிய பதவி தருவார். சக ஊழியர்களால் மனஸ்தாபம் ஏற்படும். கலைத் துறையினருக்கு வாய்ப்பு தேடி வரும்.

கேதுவின் பலன்கள்

இப்போது, உங்களின் ராசிக்கு 8-ல் வந்தமர்கிறார் கேது. அலைச்சல் இருந்தாலும் மனநிம்மதி உண்டு. நிதானம் மற்றும் பொறுமையை கடைப்பிடியுங்கள். மனைவியுடன் விட்டுக்கொடுத்து போங்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் பிள்ளை பாக்கியம் கிடைக்கும். கண் மற்றும் காதில் வலி ஏற்படும். செலவு அதிகரிக்கும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் செல்வாக்கு, புகழ் கூடும். மறைமுக எதிரிகளிடம் கவனம் தேவை.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் சகோதரருடன் அனுசரித்துச் செல்லுங்கள்.

கேது 8-ல் அமர்வதால் முன் கோபம் அதிகமாகும். வாகன விபத்து, வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் ஆகியன அதிகரிக்கும்.

அடுத்தவரது பிரச்னையில் தலையிடாதீர்கள். ஆன்மிகம், பொது அறிவு, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு.

உத்தியோகத்தில் வேலைச் சுமையால், குடும்பத்தில் சிறு கருத்து மோதல் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வரும். மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்கப் பாருங்கள். ஆசிரியரின் ஒத்துழைப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த ராகு- கேது பெயர்ச்சி, உங்களை சமயோஜிதமாக செயல்பட வைத்து முன்னேற வைக்கும்.

தனுசு

தளராத மனமும் தான- தர்மங்களில் ஈடுபாடும் கொண்ட உங்களுக்கு, ராகுவும் கேதுவும் 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் என்ன பலன்களைத் தரப்போகிறார்கள் பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்:

ராகு பகவான், இப்போது உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால் தட்டுத் தடுமாறிய உங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். சிலர் அவமதித்துப் பேசினாலும் தக்க பதிலடி தருவீர்கள். குடும்பத்தில் சிறு வாக்குவாதம் வந்து போகும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். அவர்களின் வருங்காலத்துக்காக முக்கிய முடிவு எடுப்பீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். பிள்ளைகளுக்கு படிப்பின் மீது இருந்த அலட்சியம் மாறும். நட்பு வட்டத்தைக் கண்காணியுங்கள். பண வரவு அதிகரிக்கும். என்றாலும் செலவினங்களும் துரத்தும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உங்களின் யோகாதிபதியான சூரியனின் உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவியின் உடல்நிலை பாதிக்கும். வாகனம் அடிக்கடி பழுதாகும். பயணச் செலவுகள் அதிகரிக்கும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர்.

ராசியில் நிற்கும் ராகு அடிக்கடி தலைவலி, வீண் சந்தேகம் மற்றும் சலிப்பையும் உண்டாக்குவார். உறவினர்கள் சிலர் உதவி கேட்பர். வீண் பகை, மனக் கசப்பு ஏற்படும். பெண்களுக்கு தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். தெய்வ பலத்தால் பிரச்னையை சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் வரக்கூடும். வெளி உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது. எவருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். இரவு நேரத்தில் வாகனத்தை கவனமாக இயக்கவும். அயல்நாட்டு பயணம் தேடி வரும்.

வியாபாரத்தில் அதிக முதலீடுகளைத் தவிர்த்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். போட்டியாளர்கள் அதிகரிப்பர். வேலை ஆட்கள் முரண்டு பிடிப்பார்கள். முக்கிய வேலையை முன்னின்று முடியுங்கள். பங்குதாரர்களை விட்டுப்பிடியுங்கள்.

புது ஆர்டர்கள், ஏஜென்சிகளை போராடிப் பெறுவீர்கள். அரசு விஷயங் களில் அலட்சியம் வேண்டாம். உத்தி யோகத்தில் தடைப்பட்ட உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கலைத் துறையினருக்கு பரிசு- பாராட்டு குவியும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

கேதுவின் பலன்கள்

இப்போது, ராசிக்கு 7-வது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார் கேது. உங்களின் தோற்றப் பொலிவை கூட்டுவதுடன், அறிவாற்றலையும் அதிகப்படுத்துவார். பிரபலங்கள் அறிமுகமாவர். பிள்ளைகளின் நலனுக்காக திட்டமிடுவீர்கள். உடன்பிறந்தோர் ஒத்துழைப்பர். 7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் தம்பதிக்குள் காரசார விவாதம் வந்து போகும். பரஸ்பரம் சந்தேகப்படுவதைத் தவிர்க்கவும். சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம்.

கேது- 27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் தடைப்பட்ட வேலை நடந்தேறும். எதிர்பார்த்த பணம் வரும். கடனை அடைப்பீர்கள். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத் தில் செல்வதால் மனைவிக்கு அறுவை சிகிச்சை, ஏமாற்றம், அலைச்சல் ஆகியன வந்து செல்லும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பயம் விலகும். எதிலும் வெற்றி உண்டு.

7-ஆம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துமோதல் ஏற்படும். வேலையாட் களிடம் வீண் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மதிக்கப்படுவீர்கள். மாணவர்களுக்கு விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். கெட்ட நண்பர்களைத் தவிர்க்கவும்.

இந்த ராகு-கேது மாற்றம் உங்களை மேலும் பக்குவப்படுத்தும்; பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் வைக்கும்.

மகரம்

மனம் விட்டுப் பேசுபவர்களாக, எவர் பொய் சொன்னாலும் மன்னிக்காதவர்களாகத் திகழும் உங்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி என்ன செய்யும் என்று பார்ப்போமா?

ராகுவின் பலன்கள்

ராகுபகவான் இப்போது ராசிக்கு 12-ஆம் வீட்டுக்கு வந்து அமர்வதால் நோய் நீங்கும். முகத்தில் சந்தோஷம் பொங்கும். பிறரது பிரச்னைகளை கையில் எடுத்து சிக்கிய நிலை மாறும். விலகியவர்கள் வலிய வந்து பேசுவர். இழுபறியான பணிகள் முழுமையடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். பிரிந்திருந்த தம்பதி ஒன்று சேருவர். வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். வீட்டில் அடுத்தடுத்து கல்யாணம், காது குத்து என நல்லதெல்லாம் நடைபெறும். தூரத்து உறவினர்கள்கூட உங்கள் வீடு தேடி வருவர்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் மனைவி வழியில் மருத்துவச் செலவு வந்து நீங்கும்.

29.12.2009 முதல் 5.9.2010 முடிய உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் செல்வதால் பணத்தட்டுப்பாடு நீங்கும். திருமணம் கூடி வரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் புண்ணியத் தலங்களுக்குச் செல்வீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர்.

பிள்ளைகளிடம் வெறுப்பாகப் பேசாமல், பாசமாகப் பழகுவீர்கள். அவர்களை உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு அயல்நாட்டுக்கு அனுப்புவீர்கள். உங்களின் உண்மையான அன்பை உடன்பிறந்தோர் உணருவர். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பூர்வீகச் சொத்தில் இருந்த சிக்கல் விலகும். தந்தையுடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். தாயாரின் உடல்நிலை சீராகும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்குவீர்கள். குலதெய்வக் கோயிலை எடுத்துக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள் உதவுவர்.

கன்னிப்பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறு, தூக்கமின்மை ஆகியன நீங்கும். கல்யாணம் நடைபெறும். வெளிநாட்டில் உள்ளவர்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் பலத்தை நிரூபித்து தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பார்கள். அக்கம்பக்கத்தாரது அன்புத் தொல்லை விலகும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். போட்டியாளர்களை அனுபவ அறிவால் வெல்வீர்கள். பழைய சரக்குகளை விற்பீர்கள். விலகிச் சென்ற வேலையாட்கள் வருவர். கூட்டுத் தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். ஏற்றுமதி, இறக்குமதியால் அதிக லாபம் வரும். உத்தியோகத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் உயரதிகாரியைக் கவர்வீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கலைஞர்களுக்கு, புகழ் கூடும். வருமானம் உயரும்.

கேதுவின் பலன்கள்

உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் கேது அடியெடுத்து வைப்பதால் பிரச்னையின் ஆணிவேரைக் கண்டறிந்து அகற்றும் சக்தியைக் கொடுப்பார். ஷேர் மூலம் பணம் வரும். சொத்து வாங்குவீர்கள்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் உதவுவர். செல்வாக்கு கூடும். திருமணம் நடந்தேறும். 4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் எவரை நம்பியும் முக்கிய முடிவு எடுக்க வேண்டாம். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் பங்காளிப் பிரச்னை தீரும்.

கேது 6-ல் நிற்பதால் புத்தி சாதுர்யத்துடன் பேசி சில வேலைகளை முடிப்பீர்கள். கையில் காசு,பணம் புரளும். பழைய கடனையும் பைசல் செய்வீர்கள். பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். உங்கள் பேச்சுக்கு மரியாதை கூடும். உடல்நலம் சீராகும். உத்தியோகம் மீதான வழக்குகள் வெற்றி பெறும். ஆடை- ஆபரணங்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கௌரவப் பதவி தேடி வரும். மாணவர்களுக்கு நினைவாற்றல் பெருகும். மதிப்பெண் உயரும்.

விரக்தி மற்றும் பணப் பிரச்னையில் தவித்த உங்களுக்கு யோகங்களையும் உற்சாகத்தையும் வாரி வழங்குவதாக இந்த ராகு-கேது பெயர்ச்சி அமையும்

கும்பம்

அன்புடன் பழகி அனைவருக்கும் உதவும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகு-கேது மாற்றம் என்ன செய்யப் போகிறது... பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்கு வருவதால் தன்னம்பிக்கை மற்றும் பணவரவைத் தருவதுடன் வீண் செலவையும் குறைப்பார். சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். மதிப்பு கூடும். தம்பதிக்குள் இருந்த சண்டை- சச்சரவு நிலை மாறும். குழந்தை பாக்கியம் கிட்டும். கடனை அடைப்பீர்கள். பிள்ளைகள், கெட்ட நண்பர்களிடம் இருந்து விலகுவர். உயர்கல்வியில் வெற்றி பெறுவர். மகனின் தனித் திறமையைக் கண்டுபிடித்து உற்சாகப் படுத்துவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணம் மற்றும் வி.ஐ.பி-களின் தொடர்பு கிட்டும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். மே மாதம் முதல், வெற்றி உண்டு. திருமணம் கூடி வரும். வேலை கிடைத்து, அந்தஸ்து உயரும்.

6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வதால் உடல் நலம் பாதிக்கும். பிரச்னையில் சிக்க வைக்க சிலர் முயலுவர். கவனம் தேவை.

11-ல் ராகு இருப்பதால் பாதியில் நின்ற வேலையை முடிப்பீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பெற்றோர் மற்றும் உடன் பிறந்தோர் இடையே இருந்த மனக் கசப்பு நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறிய நிலை மாறி, அனைவரும் பணிவர். குல தெய்வத்திடம் குழந்தைக்காக வேண்டிக்கொண்ட பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

பெண்களுக்கு தோஷம் நீங்கி கல்யாணம் நடைபெறும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவீர்கள். வழக்குகள் விரைந்து முடியும். அரசியல்வாதிகள் இழந்த பதவியைப் பெறுவர். அக்கம்பக்கத்தாருடன் உறவு சுமுகமாகும்.

வியாபாரத்தில் போட்டியை சமாளிக்க புதிய உத்தியைக் கையாளுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள். அனுபவம் மிகுந்த வேலையாட்கள் வருவர். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். திறமை வெளிப்படும். கலைத் துறையினருக்கு வேற்று மொழி வாய்ப்பு தேடி வரும். சம்பள பாக்கி வந்து சேரும்.

கேதுவின் பலன்கள்

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய வீடான 5-ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். பிள்ளைகளால் பெருமை உண்டு. ஆனால் செலவும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்கவும். சேமித்த தொகையில் வீடு வாங்குவீர்கள். வதந்தியில் இருந்து விடுபடுவீர்கள். தயக்கம், தடுமாற்றம் ஆகியன வந்து நீங்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் குழந்தை பாக்கியம் உண்டு. அரசு காரியம் விரைந்து முடியும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் தலைச்சுற்றல், வயிற்றுவலி, அலைச்சல் மற்றும் செலவு உண்டு.

10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமை, திடீர் பயணம் அதிகரிக்கும்.

கேது 5-ஆம் வீட்டில் அமர்வதால் பங்குதாரர்களிடையே நிலவிய பனிப்போர் நீங்கும். உங்கள் ஆலோசனைகளை ஏற்பார்கள். புரோக்கரேஜ், கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகள் ஆதாயம் தரும்.

உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு எல்லாம் தேடி வரும். மாணவர்களுக்கு மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்.

இந்த ராகு- கேது பெயர்ச்சி, திக்கு திசையறியாது தடுமாறித் திணறிக்கொண்டிருந்த உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும்.

மீனம்

எளிமையாக வாழும் உங்களுக்கு, 27.10.2009 முதல் 27.4.2011 வரை உள்ள காலத்தில் ராகுவும் கேதுவும் என்ன பலன்கள் தரப் போகிறார்கள்... பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்

ராசிக்கு பதினோராம் வீட்டில் இருந்து பொருள் வரவு, திடீர் லாபம், வாகன வசதி என தந்த ராகு பகவான் இப்போது பத்தாவது வீட்டில் அமர்கிறார். குடும்பத்தில் அமைதி தொடரும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய கடனில் ஒரு பகுதி அடைபடும். பணவரவு உண்டு. ஆடம்பரப் பொருட்கள் சேரும். நன்கு பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள்.

உழைப்புக்கேற்ற நற்பலனை அடைவீர்கள். ராகுவின் இந்தப் பெயர்ச்சியால், சுய சிந்தனை மேலோங்கும். சுயதொழில் செய்ய வல்லமை ஏற்படும். மனைவி வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குலதெய்வக் கோயிலுக்கு சென்று வாருங்கள். குழந்தை பாக்கியம் உண்டு.

27.10.2009 முதல் 28.12.2009 முடிய உத்திராட நட்சத்திரத்தில் செல்வதால் வேற்று நாட்டிலிருப்பவர்கள் உதவுவர். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். 29.12.2009 முதல் 5.9.2010 முடிய பூராட நட்சத்திரத்தில் செல்வதால் வேலைச்சுமையும்,ஆடம்பரச் செலவுகளும் அதிகரிக்கும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். பணவரவு உண்டு. பதவிகள் தேடி வரும். மனைவிக்கு மருத்துவச் செலவு வரும். 6.9.2010 முதல் 27.4.2011 முடிய மூல நட்சத்திரத்தில் செல்வ தால் வதந்திகள் வெளியாகும். சகிப்புத்தன்மையுடன் செயல்படுங்கள்.

ராகு 10-ல் வருவதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கும். கன்னிப் பெண்கள் விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வர். நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது. வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள்.

வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் உண்டு. பழைய சரக்குகளை சலுகை களால் விற்பனை செய்வீர்கள். பாக்கி களும் வசூலாகும். கடையை விரிவுபடுத்தி நல்ல வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு.

கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களை கலந்து ஆலோசியுங்கள். மேலதிகாரிகளுடன் நெருக்கமாவீர்கள். இடமாற்றம் உண்டு. கலைஞர்களின் திறமைக்கு பரிசு- பாராட்டு கிட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து, புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும்.

கேதுவின் பலன்கள்

ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, சொந்த- பந்தங்களிடையே கருத்து மோதல் என கசப்பான அனுபவங்களைத் தந்த கேது, இப்போது ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்வதால் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சால் காரியங்களை சாதிப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் விருப்பங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும்.

27.10.2009 முதல் 3.5.2010 முடிய புனர்பூச நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. கௌரவ பதவிகள் தேடி வரும். அந்தஸ்து உயரும்.

4.5.2010 முதல் 9.1.2011 முடிய திருவாதிரை நட்சத்திரத்தில் செல்வதால் ஏமாற்றம், வீண்பழி, உடல்நலக்குறைவு, வேலைச்சுமை, விரக்தி ஏற்படக்கூடும். 10.1.2011 முதல் 27.4.2011 முடிய மிருகசீரிட நட்சத்திரத்தில் செல்வதால் வீடு- மனை வாங்குவது, விற்பதில் இருந்த சிக்கல்கள் தீரும்.

கேது 4-ஆம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது யோசித்து கையெழுத்திடுவது நல்லது. தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. சொந்த ஊரில் மதிப்பு- மரியாதை கூடும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

இந்த ராகு-கேது மாற்றம் நல்ல அனுபவ அறிவையும், பலரின் நட்பையும் அமைத்துத் தரும்.

No comments:

Post a Comment