Monday, February 2, 2009

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டுள்ளது – கொழும்பு ஊடகம்


விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று நேற்று நடைபெற்ற ஊடறப்புத் தாக்குதலின் போது குண்டு வீச்சில் ஈடுபட்டதாக பாதுகாப்பு தரப்பை மேற்கோள்காட்டி கொழும்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 30 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் தாக்குதல் அணி ஒன்று இலங்கை இராணுவத்தின் 59வது படைப்பிரிவை ஊடறுத்து தாக்குதல் நடத்தியதாகவும் இதன் போது படைத்தரப்பிற்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் நடைபெற்ற வேளை விடுதலைப்புலிகளின் விமானம் ஒன்று குண்டு வீச்சை மேற்கொண்டு விட்டு விசுவமடுவிற்கு மேற்காக சுமார் 1.5 கிலோமீற்றர் தொலைவில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசுவமடு பிரதேசத்தை கைப்பற்றி அங்கு நிலை கொண்டுள்ள 58வது படைப்பிரிவினால் இந்த விமானம் தரையிறங்கியமை தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து குறிப்பிட்ட பகுதியை நோக்கி இலங்கை இராணுவம் தொடர்ச்சியான பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அணிகள் முல்லைத்தீவு களப்பின் ஊடகவே இந்த ஊடறுப்பை மேற்கொண்டதாகவும் இதில் கடற்புலிகளின் பங்களிப்பும் கணிசமாக இருந்திருக்கலாம் என்றும் படைத்தரப்பை மேறகோள் காட்டி அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்தத் தாக்குதலின் போது அரச படையினரின் 3 யுத்த தாங்கிகள் மற்றும் துருப்புக் காவி வாகனம் என்பன சேதமடைந்துள்ளதாக வெளியான தகவல்களை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.

No comments:

Post a Comment