Wednesday, December 17, 2008

வட்டக்கச்சியில் மக்கள் குடியிருப்புகள் மீது விமானத்தாக்குதல்கள்: ஒரு வயது குழந்தை உட்பட 6பேர் காயம்



கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் இரு தடவைகள் தாக்குதல்கள் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை, இரண்டு சிறுவர்கள் உட்பட 6 அப்பாவி பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல்கள் இன்று புதன்கிழமை காலை 7.30 மணிக்கும், மு.பகல் 10 மணிக்கும் இரு தடவைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த இரண்டு சிறுவர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் சிந்துஜா வயது 8, மற்றையவர் நிருஷன் வயது 10. இவர்கள் இருவரும் வட்டக்கச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் புலிகளிடம் இப்படி படுதோல்வி அடைந்த சிங்கள இராணுவம் அப்பாவி மக்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறது.வட்டகச்சி பகுதியில் வீடுகளை இழந்த பொதுமக்கள் வசித்து வந்த குடிசைகள் மீது இன்று காலை முதல் இரண்டு தடவைகள் இராணுவ விமானங்கள் குண்டு மழை பொழிந்துள்ளன.

அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment