Tuesday, March 17, 2009

இந்தியாவின் உதவியினாலேயே புலிகளுடனான போரில் வெற்றி பெற்றோம்: சிறிலங்கா அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவிப்பு



தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சிறிலங்கா இராணுவம் வெற்றி பெறுவதற்கு இந்திய அரசாங்கமே மிகப்பெரிய உதவி செய்தது என்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சபையின் முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகள் இல்லையேல் விடுதலைப் புலிகளை போரில் வெற்றி கொண்டிருக்க முடியாது எனவும் சபையில் எடுத்துக்கூறிய அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, சிறிலங்கா மக்கள் இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளனர் என்றும் வலியுறுத்தி கூறினார்.

நாடாளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 9:30 நிமிடத்துக்கு சபாநாயகர் வி.ஜே.மு லொக்கு பண்டார தலைமையில் கூடியதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாய்மூல கேள்வி நேரம் இடம்பெற்றது.

அதனையடுத்து, சபாநாயகரின் இணக்கத்துடன் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுத்தலைவர் அனுரகுமார திசநாயக்க போரில் காயமடையும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்திய மருத்துவர் குழு அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிறப்பு அறிக்கையினை சபையில் வெளியிட்டு விளக்கம் கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, இந்திய அரசாங்த்திற்கு புகழாரம் சூட்டி கட்சி வேறுபாடுகள் இன்றி இந்தியாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

புல்மோட்டையில் தற்காலிக மருத்துவ முகாம் அமைத்துள்ள இந்திய மருத்துவ குழு இந்திய இராணுவ மருத்துவ குழு அல்ல, இந்திய இராணுவத்திற்கு மருத்துவம் செய்த இராணுவத்தினர் அல்லாத மருத்துவ குழுதான் இங்கு வருகை தந்துள்ளது என தெரிவித்தார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் சட்ட திட்டங்களுக்கு அமைவாகவே இந்திய மருத்துவ குழு இங்கு சேவையாற்றும். இந்தியா வழங்கிய நிவாரணப் பொருட்கள் கூட சிறிலங்காவின் இறையான்மைக்கு கட்டுப்பட்ட உதவிகள்தான் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா ஜே.வி.பி.யின் சந்தேகங்களுக்கு பதிலளித்து கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு இராணுவ உதவிகள் எதனையும் வழங்கவில்லை என இந்திய அரசின் உயர்பீடமும் தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மறுத்து வந்த நிலையில் சிறிலங்காவின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பகிரங்கமாக இந்திய அரசாங்கத்தின் உதவிகளுக்கு நன்றி தெரிவித்திருப்பது இந்திய உயர்பீடத்தின் கூற்றுக்கள் முற்றிலும் பொய்யானது என்பதையே நிரூபித்திருக்கின்றது.

1 comment:

  1. நாடகம்!
    எவ்வளவு நடிகர்கள்?
    அடப்பாவிகளா!
    நேற்று வரை நமக்கு குரல்....ஆனால், இன்ட்று
    பதவி மோகம்.....
    தமிழ் நாட்டு தமிழர்கள் என்ன செய்ய போகிரோம்?

    ReplyDelete