Tuesday, March 2, 2010

பகலில் ஆன்மிகம், இரவில் பெண்மிகம்..






மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி லேட்டஸ்ட் பட்ஜெட்டை படித்த போது, ''பொதுமக்களுக்கு சேவை செய்யும் அறக்கட்டளைகள், ஆதாயத்தோடோ வியாபார நோக்கத்தோடோ செயல்பட்டால், அவை வரிவிலக்கு சலுகைக்கு உட்பட்டு வராது.

அதேசமயம், பல அறக் கட்டளை அமைப்புகள், இந்த சட்டத்தை தளர்த்தி வரி விலக்கு கொடுக்குமாறு கேட்டு வருகின்றன. இவர்களது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு 10 லட்சத்துக்கு உட்பட்டு வருமானம் பெறும் அறக்கட்டளைகள் இனி வரிவிலக்கை பெறலாம்!'' என்று அறிவித்தார்.

இப்படி, மத்திய நிதி அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்த மறுநாளே, அந்த பகீர் விஷயத்தை டெல்லி போலீஸார் வெளிச்சத்துக் கொண்டு வந்தனர். ஆன்மிகத்தின் பெயரில் ஆஸ்ரமம் உருவாக்கி வரிவிலக்கு பெற்ற ஒரு ஆள், விபசார இடைத்தரகராகவும் கொடிகட்டிப் பறந்த விவகாரம் அது..!

வெப்-சைட் மூலம் விபசாரம் நடப்பதாக வந்த தகவலின் அடிப்படையில், டெல்லி போலீஸார் கடந்த சில மாதங் களாகவே ஒரு கும்பலை கண்காணித்து வந்தனர். அந்த கும்பல் கடந்த 26-ம் தேதி சிக்கியது. அதில் சிக்கிய முக்கியப் புள்ளி டெல்லியில் ஆஸ்ரமம், சாய்பாபா கோயில் என்று நடத்திய தோடு, ஆன்மிகப் பிரசாரப் புள்ளியாக இருப்பதும் தெரிந்தது. அவன் பெயர் ஷிவ் முராத் திவிவேதி!

'விபசார சாமியார்' திவிவேதி பற்றி டெல்லி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம்.

''திவிவேதி தன்னை 'இச்சாதாரி' சாது என்றும் சொல்லிக் கொண்டு இருக்கிறான். இச்சாதாரி சாது என்றால், இவன் கழுத்தில் பாம்பு (விஷப்பல் பிடுக்கப்பட்டதுதான்..!) ஒன்று இருக்கும். பொதுவாக நாகதேவதை, மனிதனின் உருவம் எடுக்கும் என்றும் தன்னைக் கொன்றவரை பழி வாங்கும் என்றும் நிறைய சினிமா கதைகளை நம்பும் பொது ஜனங்களை ஈர்க்கவே கூடுதல் அட்ராக்ஷனாக தன் கழுத்தில் எப்போதும் பாம்பை வைத்துக்கொண்டான் இந்த ஷிவ் முராத் சாமியார். ஒருபக்கம் ஷிர்டி ஸ்ரீ சாய்பாபாவின் பக்தர், சாது, ஆன்மிக குரு, பிரசாரகர், மெடிட்டேஷன், மருத்துவம் என மான் தோல் போர்த்திய புலியாக பகலில் ஆன்மிகத் தொண்டு செய்துவந்த இந்த சாமியார்... இரவுகளில் பல வி.ஐ.பி-க்களின் இச்சையைத் தணிக்கும் கேவலமான 'நெட்வொர்க்'கையும் நடத்தி வந்தான். அதுவும் நாடு முழுக்க நடத்தியிருக்கிறான் இந்த கில்லாடி வேஷதாரி...'' என்று முன்னோட்டம் தந்தவர்கள், சாமியாரின் பூர்வாசிரமத்தை சொல்லத் தொடங்கினார்கள்.

''32 வயதான ஷிவ் முராத் சாமியாருக்கு சொந்த ஊர், அலகாபாத் அருகில் இருக்கும் சித்ரகூட்! அயோத்தி யிலிருந்து வெளியேறிய ராமர், லட்சுமணர் மற்றும் சீதை ஆகியோர் முதன் முதலில் தங்கியிருந்ததாகக் கூறப்படுவது இந்த சித்ரகூட்தான். துளசிதாஸர் தனது 'ராம் சரித் மானஸ்' எழுதியதும் இந்த ஊரில்தான். இங்கிருந்து இப்படியரு அசிங்கம் பிடித்த ஆள் கிளம்பி வந்திருப்பது கொடுமைதான்.

ஒன்பதாம் வகுப்பு வரை படித்த ஷிவ் முராத், டெல்லிக்கு வேலை தேடி வந்து 'பார்க் ராயல்' நட்சத்திர ஹோட்டலில் செக்யூரிட்டி வேலையில் சேர்ந்திருக்கிறான். பின்னர் டெல்லி லாஜ்பத் நகரில் மசாஜ் வேலையை தொடர... அப்போதே அவனுக்கு விபசார புரோக்கர்கள் மூலம் தொடர்பு ஏற்பட்டது. அந்த தொழிலில் ஈடுபட்டபோது... 1997-ல் போலீஸில் மாட்டிக்கொண்டு ஜெயிலுக்கு சென்றான். அதன்பிறகு தன் தொழிலை மீண்டும் 1998-ல் தொடங்கி, இன்னும் இன்னும் ஹைடெக்காகப் போய்... 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கைதாகியுள்ளான்!

விபசாரத் தொழிலைத் தொய்வின்றியும் பயமின்றியும் தொடர இவன் போட்டுக்கொண்ட சாமர்த்தியமான திரைதான் ஆன்மிக வேஷம்! இந்த கபட சாமி இரவில் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து, இடைத்தரகர் அவதாரம் எடுப்பான். முன்னாள் விபசார புரோக்கர் என்றாலும், சாமியார் போர்வையில் காவி உடுத்தி, தாடியில் பிரசங் கம் செய்த இவனை பக்தர்களாகப் பார்க்க வந்த பல போலீஸ் அதிகாரிகளுக்கும் இவன் மீது சந்தேகம் வர வில்லை. கடந்த மூன்று மாதங்களாக இவன் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்களை தொலைத் தொடர்புகள் மூலம் ரகசியமாக கண்காணித்து வந்தபோதுதான்... 'ஓ அவனா நீ!' என்று உஷாரானார்கள் போலீஸார்.

தனக்கு நன்றாக நம்பிக்கை வந்த பிறகுதான் குறிப்பிட்ட வாடிக்கையாளார்களுக்கு பெண்களை சப்ளை செய் வான் இந்த ஆ'சாமி'! அப்படி நம்பிக்கை பெற்ற ஒரு வாடிக்கையாளரை மிரட்டி தங்களுக்கு ஒத்துழைக்க வைத்த போலீஸார், தாங்களே நட்சத்திர ஹோட்டலில் ரூம் எடுத்துத் தங்கி, புதிய வாடிக்கையாளராக நடித்து விபசாரத்துக்குப் பெண்களைக் கேட்டு... கையும் களவுமாக இவனைப் பிடித்தார்கள். அப்படி கைதானபோதும்கூட, கருமம் பிடித்த இந்த கும்பல் காவி நிற துணியால் முகத்தை மறைத்துக்கொண்டதுதான் கொடுமை!

இவனை போலீஸ் பிடித்தபோது ஐந்து இளம் பெண் களும் சிக்கினார்கள். இதில் விமானப் பணிப் பெண், டெல்லி பல்கலைக்கழகக் கல்லூரியில் நிர்வாக இயல் படிக்கும் பெண், சினிமா பயிற்சிக் கல்லூரியில் படிக்கும் பெண் என்று உயர்ந்த அந்தஸ்து கொண்டவர்கள்! சினிமா பயிற்சிக் கல்லூரிப் பெண், மும்பையைச் சேர்ந்த ஒரு சுங்க இலாகா அதிகாரியின் மகள் என்று 19 முதல் 22 வயசு பெண்கள்! இப்படி உயர் குடும்பத்துப் பெண்கள், பணத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள் எப்படி இந்த பகீர் சாமியாரிடம் மடங்கினார்கள் என்பதுதான் பெரிய அதிர்ச்சி!'' என்றார்கள்.

போலீஸ் அதிகாரி பங்கஜ் சிங்கிடம் பேசினோம். ''இந்த போலி சாமி தன் வாடிக்கையாளர்களுக்கு விபசார பெண்களை தேடுவதற்கு வசதியான வழியாகத்தான் ஆன்மிகத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான். அதை எல்லோ ரும் நம்புவதற்காக, முறைப்படி ஆன்மிக விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டதுதான் இவனுடைய கிரிமினல்தனத்தின் உச்சம்! மத்திய பிரதேசத்தில் ஒரு மடத்தில் சேர்ந்து ஆன்மிகத்தில் சில விஷயங் களைக் கற்றிருக்கிறான். அங்கே இரண்டு வருட பயிற்சிக்குப் பின்னர் தன்னை ஸ்ரீசாய்பாபா பக்தராகவும், அற்புத சக்திகள் கொண்ட அசாத்திய துறவியாகவும் காட்டிக் கொண்டு முழு வீச்சில் இறங்கிவிட்டான். இதன் விளைவாக, பக்தர்களின் எண்ணிக்கை கூடியது. பாபா கான்பூர், சுவாமி பீமானந்த் மகாராஜ், இச்சாதாரி சாது என்று ஏராளமான பட்டப் பெயர்களில் பக்தர்கள் சிலிர்த்துக்கொண்டு இவனைத் தேடி வந்தார்கள்.

டெல்லிக்குள் இருக்கும் கான்பூர் என்கிற பகுதியில் தான் ஆன்மிகத்துக்கான அஸ்திவாரத்தை போட்டான். அங்கே பக்தி மணம் கமழும் கோயிலை கட்டி, பெண்களை தன்னுடைய வலையில் சிக்க வைக்கத் தொடங்கினான். ஒன்பதாம் வகுப்பே படித்த இவன் சொற்பொழிவுகளில் பொளந்து கட்டினான். லட்சக் கணக்கான பக்தர்கள் வந்தனர். ஏக பத்தினி விரதனான ராமனின் அவதார கதைகளையும், பல ஆன்மிக கதை களையும் சொல்லி பிரமிக்க வைக்கும் ஸ்டைல்தான் இவனது ஸ்பெஷாலிட்டி..!'' என்று சொல்லி, சாமியார் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ சி.டி-யை நம்மிடம் கொடுத்தார். அதில் உள்ள சொற்பொழிவுக் காட்சிகளைப் பார்த்தால், சத்தியமாக இது டுபாகூர் ஆசாமி என்று சந்தேகமே வராது போலிருந்தது. தொடர்ந்து பேசிய போலீஸ் அதிகாரி பங்கஜ், ''பெரிய பெரிய துறவிகளுக்குக் கொடுக்கப்படும் மரியாதைகளைப் போன்று, இவன் நடந்து வரும்போது மலர்களை தூவுவது, முற்றும் துறந்த முனிவர்களுக்கு இணையாக தனியான இருக்கையில் அமரவைப்பது, இவன் கழுத்தில் பாம்பு நெளிவதற்கான செட்-அப்களைச் செய்வது என்று ஊதியத்துக்கு நிறையவே அடியாட்கள் வைத்திருந்தான். அவர்களையே ராத்திரியில் பெண்கள் சப்ளைக்கு பாதுகாவலர்களாக வைத்துக்கொண்டானா என்றும் விசாரித்து வருகிறோம்.

மெடிட்டேஷன் பற்றி பகலில் இவன் எடுக்கும் வகுப்புகளுக்கு டெல்லியின் மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் அடிமைகளாக இருந்திருக்கிறார்கள். தான் குறிவைக்கும் பெண்களை தானே நேரடியாக டீல் செய்திருக்கிறான். அவர்களைப் பேசிப் பேசி மயக்கி, பணத்தையும் விட்டெறிந்துதான் அந்தப் பெண்களின் கற்பை விலைக்கு வாங்கியிருக்கிறது இந்தத் திமிங்கிலம். வீட்டுப் பெண்கள், கல்லூரி மாணவிகள், விடுதி மாணவிகள், வேலை தேடும் பெண்கள், நடிப்பாசை, மாடலிங் ஆசை கொண்ட பெண்கள் என்று மட்டுமின்றி, உச்சகட்டமாக பள்ளிச் சிறுமிகள் வரை தனது தொழிலுக்கு வலை வீசியிருக்கிறான். தான் அனுப்பிய இடங்களுக்குப் போகும் பெண்களில் சிலருக்கு ஐயாயிரம் பத்தாயிரம் என்று பணம் கொடுத்திருக்கிறான். பெரிய இடத்துப் பெண்களுக்கு வேறு ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறான். அதெல்லாம் என்னவென்று விசாரித்து வருகிறோம். அதோடு, இவனிடம் வாடிக்கை யாளர்களாக இருந்தவர்களில் அதிகார சக்தி மிக்கவர்களும் உண்டா என்று விசாரித்து வருகிறோம்...'' என்றார். அரசு மையங்களில் பெரிய வேலைகளை முடிப்பதற்காக பெண்களை ஒரு கருவியாக இந்த ஏடாகூட சாமியார் பயன்படுத்தியதுண்டா என்பது போலீஸின் ஒரு சந்தேகம்.

லோக்கல் ஸ்டேஷன் போலீஸாருக்கு இந்த சாமியின் தில்லுமுல்லுகள் அரசல் புரசலாகத் தெரிந்தே இருந்தும் இத்தனை நாளாகக் கண்டு கொள்ளவில்லையாம். சிறப்பு போலீஸ் அதிகாரிகள்தான் கண்ணி வைத்து வளைத்தனர்.

''டெல்லியில் மட்டுமல்லாது, தனது சொந்த ஊருக்குப் பக்கத்தில் சம்ராவு என்ற கிராமத்திலும் அறக்கட்டளை தொடங்கி, ஆஸ்ரமம் கட்டி சாய்பாபா கோயிலையும் உருவாக்கினான் இந்த ஆள். அவற்றில் பணமும், நன்கொடைகளும் கொட்டியது. இதற்காக 'திவிவேதி டிரஸ்ட்' தொடங்கினான். மேலும் டெல்லியிலும் தனது சொந்த ஊரான சித்ரகூட்டிலும் ஏராளமான சொத்து களை வாங்கிக் குவித்திருக்கிறான். டெல்லியில் மூன்று இடங்களில் ஜம்மென்று பில்டிங், நிலம் எல்லாம் உள்ளது. சொந்த ஊரில் 200 படுக்கை கொண்ட ஒரு மருத்துவமனையையும் கட்டி வருகிறான். இவனது சகோதரர் ஒரு டாக்டர்... அவருக்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்டி யிருக்கிறான்'' என்று தகவல் சொல்லுகிறார்கள் போலீஸ் துறைக் குள்ளேயே!

சாமியாரின் சாய்பாபா கோயில் மூன்று மாடிக் கட்டடத்தில் உள்ளது. இதன் கீழ்ப்பகுதி யிலும் முதல் மாடியிலும் சாய்பாபாவின் சிலைகளும் பூஜைகளுக்கான பொருட்களும் இருக்கும். இதே கோயிலில் ஜம்மு வைஷ்ணவா தேவியின் குகைக்கோயில் அமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளான். இவன் கைதான பிறகும் அந்தக் கோயிலில் தினமும் காலையிலும் மாலையிலும் ஆரத்திகள் நடக்கிறது. பக்தர்களும் வந்தபடிதான் இருக்கிறார்கள்..!

ஆஸ்ரமத்திலிருந்து ஏராள மான டைரிகளும் வங்கிக் கணக்குகளும் போலீஸாரின் சோதனையில் கிடைத்துள்ளது. இதில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண்களின் தொடர்புகளோடு கடந்த 10 வருட வங்கிக் கணக்கு களும் பிரமிக்கவைக்கும்படி உள்ளது. உள் நாட்டு முதலீடு தவிர, வெளிநாட்டுக்கும் இந்த சாமியார் பணம் அனுப்பிய தகவலும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது!

விசாரணையின்போது, ''எத்தனை நாள்தான் இந்தத் 'தொழி லையே' பார்ப்பது? நீங்கள் வந்து என்னைப் பிடிக்காவிட்டாலும் நானே எல்லாவற்றையும் ஏறக் கட்டிவச்சிட்டு, ஊரில் உள்ள ஆஸ்பத்திரியை கட்டி முடித்த கையோடு வெளிநாட்டில் செட்டில் ஆக இருந்தேன். அதற் குள் அவசரப்பட்டு(?) வளைத்து விட்டீர்கள்'' என்று சாமியாரின் திருவாய் மலர்ந்ததாம்! ''அரசு குடியிருப்பில் இடம் கேட்டு அவன வனும் அல்லாடிக் கொண்டிருக்க... டெல்லியில் மூன்று அரசாங்க வீடுகளை வாடகைக்கு எடுத்து, அங்கு 50 பெண்களை தங்கவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கான் இந்த சாமியார். இவனோடு தொடர்புடைய 200 விபசார பெண்களில், ரஷ்யாவை சேர்ந்த பெண்களும்கூட அடக்கம்! இந்த ஆள் கைதான அடுத்த நிமிடமே எல்லோரும் பறந்துவிட்டனர். இவனுக்கு டெல்லி தவிர மற்ற மெட்ரோ நகரங்களில் உள்ள நெட்வொர்க் பற்றி விசாரிக்கிறோம்'' என்று பிரமிப்போடு சொல்லும் போலீஸார், மூன்று கட்டடங்கள், இருபது ஏக்கர் நிலம், கடைகள், சொகுசு கார்கள், சி.டி. தயாரிக்கும் நிறுவனம், பத்திரிகை இதழ் அச்சகம் என்று சொத்துப் பட்டியலைச் சொல்லி வாய் பிளக்க வைக்கிறார்கள்.

இரண்டு பக்தி தொலைக் காட்சிகள் மேற்படியாரின் ஆன்மிக சொற்பொழிவுகளை 'பிரைம் டைமி'ல் தினந்தோறும் ஒளிபரப்பி வந்த காமெடியை என்ன சொல்ல! இதைவிட உச்ச கட்ட அநியாயமும் உண்டு. அதாவது, இந்த ஆளின் ஆன்மிக பக்தி சொற் பொழிவு டி.வி.டி-யில் இரண்டு மொபைல் எண்களும் வெப்சைட் விலாசமும் தரப்பட்டுள்ளது. இந்த மொபைல் எண்ணை 'கூகிள் சர்ச்'சில் போட்டுப் பார்த் தால்... இவர் நடத்தும் ராத்திரி நெட்வொர்க்கான 'ஜெய் மேத்தா' விபசார விளம்பர வெப்-சைட் வரும். இதில் வரிசையாக பெண்களின் ஆல்பமும் இருக்குமாம்!

காவியை வைத்தே ஜாலி பண்ணிக் கொண்டிருந்த இந்த நபரின் கைதுக்கு அரசியல் சாயம் கொடுக்கிற வேலைகளும் ஆரம்பமாகிவிட்டன! ''பெட்ரோல் டீசல் விலையையட்டி, எதிர்க்கட்சிகள் காட்டிவந்த எதிர்ப்புகளை கலகலக்க வைக்கவே இந்த போலி சாமியார் விவகாரத்தை இந்த நேரம் பார்த்து டெல்லியை ஆளும் அரசு கையில் எடுத்தது'' என்பதே அந்தப் பேச்சு.

''இந்த விவகாரத்தில் முன்னாள் பி.ஜே.பி. எம்.பி-க்கள் சிலரும், தற்போதைய சமாஜ்வாடி எம்.பி-க்கள் சிலரும்கூட சிக்கக் கூடும்'' என்று ஹேஷ்யம் சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

தன்னை உலுக்கி எடுத்து விசாரிக்கும் போலீஸாரிடம், 'உடல் பசியைத் தீர்ப்பதும்கூட ஒருவகை ஆன்மிகம்தான். அதற்கு உதவுவது தவறில்லை'' என்று ஒரு தத்துவத்தை இந்த டுபாகூர் அவிழ்த்துவிட... விசாரணை போலீஸார் கொதித்துப் போய் மூலையில் தள்ளி மொக்கினார்களாம்!

பல அரசியல் பிரமுகர்களும் இவனது பகல் நேர ஆன்மிக சொற்பொழிவுக்கு அடிமை. ராஷ்டிரபதி பவனையட்டியுள்ள டெல்லி நார்த் பிளாக்கில் இவனது சொற்பொழிவு இரண்டு வருடம் முன்பு நடந்தது. இதை ஏற்பாடு செய்தவர்கள், பி.ஜே.பி-யைச் சேர்ந்த எம்.பி-க்கள். இதில் மறைந்த கிஷண்லால், விஜயகுமார் மல்ஹோத்ரா மற்றும் (கிரிக்கெட் வீரர்) கீர்த்தி ஆஸாத் போன்ற எம்.பி-க்களோடு... பி.ஜே.பி-யின் சில எம்.எல்.ஏ-க்களும் கலந்துகொண்டு மெய்சிலிர்த்தார்களாம். சமாஜ்வாடி எம்.பி-யான ஆர்.கே.சிங் மற்றும் ஹரிஷ்குமார் என்கிற மாவட்ட கலெக்டர் ஒருவரும்கூட இவரது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பக்தர்களாம்!


படத்தைப் பார்த்தால், 'காஞ்சிபுரம் தேவநாத குருக் கள் விவகாரம் போலவோ' என்ற அலறல் எழுவது நியாயமே! ஆனால், இது கோவை மாவட்டத்தின் கடைக்கோடியில் அமைந்திருக்கும் மலையோர கிராமமான குப்பனூர் கோயில் திருவிழாவில், பலர் பார்க்க 'பாரம்பரிய தாசர்கள்' அரங்கேற்றும் பக்திக் காட்சி!

வருடந்தோறும் மாசி மகத்தன்று கோயில்களில் வழிபாடு நடத்திய பின்னர், 'கவாள வீதியுலா' நடைபெறுவது வழக்கம். சாமியாடியபடி வீதியுலா வரும் பாரம்பரிய தாசர்கள், வாழைப்பழங்களை தங்களது வாயில் கவ்விக் கொள்கிறார்கள். அப்போது அவர்களுக்கு முன்னால் மண்டியிடுகிறார்கள் பெண் பக்தைகள். திடீரென ஆக்ரோஷமாக சாமியாடும் தாசர்கள், வாயில் கவ்வி வைத்திருக்கும் வாழைப்பழத்தை, அந்தப் பெண் பக்தைகளின் வாயில் திணிக் கிறார்கள். சுற்றிலும் வேடிக்கை பார்த்தபடி நிற்கும் பொதுமக்கள், படபடவென கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். இந்த மாதிரி தாசர்களிடம் இருந்து பழம் பெறும் பெண்கள் பெரும்பாலும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களாம். இந்தப் பழப் பரிமாற்றத்துக்குப் பிறகு பலருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்த ஏரியாவாசிகள் சொல்கிறார்கள்!

6 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் காரமடை அரங்கநாதர் கோயில் திருவிழாவிலும், இந்த கவாள வீதி உலா நடந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக, அங்கு கவாளம் கொடுப்பது நிறுத்தப்பட்டு, குப்பனூர் அளவில் சுருங்கிவிட்டது!

1 comment:

  1. //இந்த மாதிரி தாசர்களிடம் இருந்து பழம் பெறும் பெண்கள் பெரும்பாலும் குழந்தை வரம் கேட்டு வருபவர்களாம். இந்தப் பழப் பரிமாற்றத்துக்குப் பிறகு பலருக்கு குழந்தை பிறந்துள்ளதாக அந்த ஏரியாவாசிகள் சொல்கிறார்கள்!//
    அய்யே !

    ReplyDelete