Thursday, March 4, 2010

சன் ரீவி செய்தது சரியா?

ஊடக தர்மம், ஒழுக்கம் மற்றும் விழுமியங்களுக்குட்பட்டு செயற்படுகின்ற ஊடகவியலாளனாக இருப்பதில் நான் எப்பொழுதும் பெருமைப்பட்டே வந்திருக்கிறேன். வருவேன். ஆனால், பணத்துக்காகவும் பரபரப்புக்காகவும் சிலரின் அருவருக்கத்தக்க- பொறுப்புணர்வற்ற ஊடக செயற்பாடுகள் எங்களை மக்கள் முன்னால் தலைகுனிய வைத்து விடுகின்றன.

தலைக்கு முன்னால் துப்பாக்கிகள் குறிவைக்கப்பட்டிருக்கும் தருணத்திலும் இயலுமானவரை ஊடக தர்மத்தை கடைப்பிடிப்பதில் அக்கறையுடன் செயற்பட நினைப்பவன். அல்லது, சுய தேவைகளுக்காகவும், அரசியல் நோக்கங்களுக்காகவும் மக்களை தவறாக வழிநடத்த கூடாது என்பதில் தீர்க்கமாகவுள்ள ஊடகவியலாளர்களில் நானும் ஒருவனாக இருக்க வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முயலுபவன்.

இவ்வாறான நோக்கங்களை கொண்ட எனக்கு நேற்று முன்தினம் காலை பெரும் தலையிடியை தோற்று வித்த விடயம் ‘சன் தொலைக்காட்சி’யும், ‘நக்கீரன் இணையமும்’ வெளியிட்டிருந்த சுவாமி என்கிற போர்வையில் வலம் வந்த நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகள். எனக்கு நித்தியானந்தர் செய்தது சரியா? பிழையா? என்ற கேள்விகளே முதலில் எழவில்லை. மாறாக பொறுப்புணர்வுடன் செயற்படவேண்டிய இந்த ஊடகங்கள் ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டன என்ற வருத்தமே மேலோங்கியது.

சன் தொலைக்காட்சியை கோடிக்கணக்காக மக்கள் பார்க்கின்றனர். அதில், தாயும்- மகளும், தந்தையும்- மகனும், ஏன்? பாட்டனும்- பேரனும் கூட இருக்கிறார்கள். இவ்வாறு குடும்பங்களினால் வரவேற்பறையில் பார்க்கப்படும் ‘சன் தொலைக்காட்சி’ போதிய மட்டுறுத்தல்கள் இன்றி, நித்தியானந்தர் தொடர்பான படுக்கையறைக் காட்சிகளை எவ்வாறு ஒளிபரப்ப முடியும்? அதுவும், போதிய அறிவுறுத்தல்கள் இன்றி.

குறித்த வீடியோவை செய்தியாக மக்களிடம் சமர்பிக்க முன்னர் குழந்தைகள்- சிறுவர்கள் தொடர்பிலாவது கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்களை சன் தொலைக்காட்சி வழங்கியிருக்க வேண்டுமே? ஏன் அந்த ஊடக ஒழுக்கத்தை கடைப்பிடிக்கவில்லை. சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனோ, சன் செய்திப்பிரிவின் தலைவரோ குறித்த வீடியோ காட்சிகளை குடும்பத்துடன் இருந்து பார்க்க தயாரா? இவ்வாறு எவ்வளவு விடயங்களை அவர்கள் கருத்தில் கொண்டிருக் வேண்டும். வெறும் பரபரப்புக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே அந்த செய்தியை வெளியிட்டதாகவே கருதவேண்டிய நிலைக்கு தள்ளியது யாரின் தவறு?

‘நக்கீரன்’ கோபல் மீது எனக்கு நிறைய மரியாதை சில காலத்துக்கு முன்னர் வரை இருந்தது. ஆனால், அவரின் பொறுப்பற்ற சில நடவடிக்கைகளினால் அவர் அதனை தவிடுபொடியாக்கினார். இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் நக்கீரன் கிராபிக்ஸ் உதவிகளுடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக செய்தி வெளியிட்டு காசு பார்த்தது. இலங்கை தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களே அவர்கள் எல்லோரும் பிரபாகரன் மரணத்தில் கவலை கொண்டிருந்தனர் (பிரபாகரனை எதிர்த்தவர்களும் கூட). தமிழ் மக்களின் உணர்ச்சிகளில் கல்லை வீசி காசு பார்த்த நக்கீரனை எவ்வாறு ஊடக ஓழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள் என்று கருத முடியும்.

நித்தியானந்தர் தொடர்பான வீடியோ காட்சிகளை ஒரு நீலப்படத்துக்கு நிகரான தொகுப்புக்களுடன் வெளியிட்ட ‘நக்கீரன் இணையத்தளம்’ முழுமையான காட்சிகளை காண பணத்தை செலுத்துமாறு கோரியது. இந்த செயல், நீலப்படங்களை இணையத்தில் விற்கும் ஆயிரமாயிரம் இணையத்தளங்களுக்கு ஒப்பானதே. இதை என்னவென்று சொல்வது.

தவறினை மக்களுக்கு சுட்டிக்காட்டுவதோ, போலிகளை வெளிக்காட்டுவதோ தவறில்லை. ஆனால், அதே தவறினை இவர்களும் செய்தால் எவ்வாறு சகித்துக்கொள்ள முடியும். திரைப்படங்களுக்கு யு, ஏ என்று சான்றிதள் வழங்குகிறார்கள். இந்த வீடியோ காட்சிகளுக்கு மட்டுறுத்தல் வழங்குவது யார்? இதில் என்ன நியாயம் இருகிறது என்று தெரியவில்லை.

எனக்கும், உங்களுக்கும் என்று அந்தரங்கமென்ற ஒன்று இருக்கிறது. அதற்குள் மற்றவன் தலையிடுவதை எங்களினால் அனுமதிக்க முடியுமா? அது சாமியாராக இருந்தாலென்னா, மந்திரியாக இருந்தாலென்ன? சாமானியனாக இருந்தாலென்ன? அவரவர்க்கான அந்தரங்கம் தனிப்பட்டதே. பெண்களோ, ஆண்களோ பணத்துக்காக தன்னுடைய உடலை விற்கும் போது விபச்சாரமென்கிறோம். அதையோ, படம்பிடித்து பொறுப்புணர்வற்று விற்பதை எவ்வாறு சொல்வது? அது ஊடக விபச்சாரம் தானே!.

பரமஹம்ச நித்தியானந்தர் என்கிற பெயரில் 32 வயதுடைய வாலிபனின் வாய் ஜாலங்களையும், போலி ஆன்மீகத்தையும், சொற்பொழிவுகளையும் கேட்டு அவர் ஒரு ஞானி, கடவுள் என்று மக்கள் பின்தொடர்வது சரியா?. ஒவ்வொரு மனிதனுக்கும் சராசரி உணர்வுகள் இருக்கவே செய்கின்றன. அந்த உணர்வுகளை துறந்த ஞானியாக நித்தியானந்தரை நம்பியது யாருடைய தவறு?

எங்களுக்கு இருக்கின்ற பாலியல் தேவைகள், ஆசாபாசங்கள், விருப்பு வெறுப்புக்களே மற்றைய மனிதனுக்கும் இருக்கும். அதனை புரிந்து கொள்ளாமல், அவர் கடவுள், முற்றும் துறந்த ஞானி, வழிகாட்டும் சுவாமி என்று முட்டாள் தனமாக செயற்படுவதும், அவரின் தவறுகள் வெளிவந்தவுடன் மனதுடைந்து போவதும் இந்திய மக்களுக்கு புதிதல்லவே.

தங்களை பின்நவீனத்து கர்த்தாக்களாகவும், கல்விமான்களாகவும், நட்சத்திரங்களாகவும் காட்டிக்கொள்கிறவர்களும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருக்கிறவர்களுமே இந்த போலிகளிடம் சிக்கிக்கொள்ளும் போது, சாமானிய மக்கள் இந்த ஏமாற்று வித்தைகளுக்குள் இழுக்கப்படுவதை தவிர்க்க முடியாது. நேற்று பிரேமானந்தா. இன்று நித்தியானந்தா. நாளை எந்த ஆனந்தாவோ கட்டாயம் வருவார். அவரை தொழவும் கூட்டம் கூடும்! நெஞ்சு பொறுக்குதில்லையே!!.

No comments:

Post a Comment