Wednesday, October 22, 2008

புதுடில்லி செல்லும் பசில் குழுவுடன் செல்ல தொண்டமான் மறுப்பு



சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச தலைமையிலான உயரதிகாரிகளுடன் புதுடில்லிக்கு செல்லுமாறு மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் ஏற்கவில்லை என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் விடயத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப்பணிகள் தொடர்பில் இந்திய மத்திய அரசுக்கு தெளிவுபடுத்த வேண்டியவை குறித்து கலந்துரையாட அலரி மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டபோதும் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இதுவரை அங்கு செல்லவில்லை என தெரிய வருகின்றது.

இது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அரச தலைவர் செயலக உயர்திகாரிகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முக்கிய பிரமுகர்களுடன் தொடர்பு கொண்டு இந்தியாவுக்கு சென்று விளக்கமளிக்க வேண்டிய அவசியம் குறித்து கலந்துரையாடியதாகவும் கொழும்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இந்த விடயங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் கருத்துக்கூற மறுக்கின்றனர்.

No comments:

Post a Comment