Monday, October 27, 2008

அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு நெடுமாறன் வேண்டுகோள்



அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாக கூட்டுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியிடம் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் பழ. நெடுமாறன் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் சகோதரருமான பசில் ராஜபக்ச டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு சிறிலங்காவுக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்றும் தமிழக அனைத்து கட்சிகள் செய்துள்ள முடிவு குறித்து பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக்கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment