Monday, October 20, 2008

சென்னை உண்ணாவிரதத்தில் மூவாயிரம் நடிகர், நடிகைகள்!

இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தியாகராய நகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் இந்த உண்ணாவிரதம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளளது. இதில் நடிகர் நடிகைகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உண்ணாவிரத ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது. நடிகர் சங்க வளாகத்தில் மேடையும் பந்தலும் அமைக்கப்படுகிறது. நடிகர் சங்கத்தில் சுமார் 3 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்குமாறு ரஜினி, கமல் உட்பட அனைவருக்கும் தனித்தனியாக நடிகர் சங்கம் கடிதங்கள் அனுப்பி வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்கிறார்கள். உண்ணாவிரதத்தையொட்டி முதலாம் திகதி படப்பிடிப்பில் நடிகர், நடிகைகள் பங்கேற்கமாட்டார்கள் என நடிகர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் நடிகர், நடிகைகள் முதலாம் திகதி திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் பலத்த காவல்த்துறைப் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நடிகர் சங்க அடையாள அட்டையுடன் வருபவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட உள்ளனர் என நடிகர் சங்கத் தகவலர்கள் தெரிவித்துள்ளன.கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் வடிவேலு, கருணாஸ் போன்ற ஒரு சிலர் தவிர்ந்த இயக்குநர் அல்லாத நடிர்கள் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment