Friday, October 24, 2008

இனத்துரோகிகளின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்காதீர்கள்: விடுதலைப் புலிகள் வேண்டுகோள்



மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்கும் வகையில் இனத்துரோகிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறை இன்று வெள்ளிக்கிழமை "மட்டக்களப்பு வாழ் தமிழ் பேசும் உறவுகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்!" எனும் தலைப்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தர்மப் போர் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் இந்த வேளையில் இந்தியாவில் வாழும் எமது தொப்புள்கொடி உறவுகளான எமது மக்கள் ஓரணியாக அணிதிரண்டு இலங்கையில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு ஓர் விடிவு கிடைக்க வேண்டி இந்திய அரசுக்கு முன்னால் பல போராட்டங்களை நடாத்தி வரும் இந்த சந்தர்ப்பத்தில் உலகின் பல பாகங்களிலும் வாழும் எமது உறவுகளும் தாயக மண்ணின் விடிவுக்காக தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இந்த வேளையில், எமது மண்ணில் அதற்கு எதிர்மாறான கருத்துக்களையும் செயற்பாடுகளையும் சிங்களப் பேரினவாத அரசின் கைப்பொம்மைகளாக செயற்படும் இனத்துரோகிகள் மேற்கொண்டு வருகின்றார்கள். அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (26.10.08) மட்டக்களப்பு பொது விளையாட்டு மைதானத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி நடாத்த திட்டமிட்டிருக்கின்றனர். இந்த செய்தியினை நீங்கள் நன்கறிவீர்கள்.

மகிந்தவின் பேரினவாத அரசு போடும் நாடகங்களை எமது மக்களை வைத்து அரங்கேற்றி உலகிற்கு தமிழரின் உரிமைப் போராட்டத்தை அர்த்தமற்றதாக்க இந்த இனத்துரோகிகள் முயற்சி செய்கின்றனர்.

ஆகவே, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பங்களிப்புச் செய்து வரலாற்றுத் தவறினை இழைக்க வேண்டாம் என உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment