Friday, October 24, 2008

கொழும்பு செல்கிறார் யசூசி அகாசி?



சிறிலங்காவிற்கான ஜப்பான் நாட்டின் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மிக விரைவில் கொழும்புக்கு வருகை தரவுள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமகால அரசியல் மற்றும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக சிறிலங்கா அரசின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்காக கொழும்புக்கு செல்லவுள்ள தூதுவர் யசூசி அகாசி, வன்னிப்பெரு நிலப்பரப்பில் இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து அறிந்து கொள்வார் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கபபடுகின்றது.

ஜப்பான் தூதரகத்தின் வழமையான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே தூதுவர் யசூசி அகாசியின் கொழும்புக்கான பயணம் இடம்பெறுவதாகவும் இராஜதந்திர தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

அதேவேளை, தூதுவர் யசூசி அகாசியின் கொழும்பு பயணம் தொடர்பாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு எதுவும் தெரிவிக்கவில்லை. அத்துடன் கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரகமும் அதிகாரபூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment