Tuesday, October 7, 2008

கருணாவின் நியமனத்திற்கு எதிராக ஜே.வி.பி. இன்று உயர் நீதிமன்றில் மனு தாக்கல்



தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தலைவர் கருணா அம்மான் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜே.வி.பி. இன்று உயர்நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ஜே.வி.பி.யின் தேசியப் பட்டியல் உறுப்பினர் வசந்த சமரசிங்கவின் வெற்றிடத்திற்கு கருணா அம்மான் நியமிக்கப்பட்டிருப்பது சட்டத்திற்கு முரணானதெனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன, கருணா அம்மான், சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம். லொக்குபண்டார மற்றும் தேர்தல் ஆணையாளர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஒக்ரோபர் மாதம் 6ம் திகதி 1570/6 என்ற வர்த்தமானி அறிவித்தலின் மூலம் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா அம்மான் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானதென இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்யுமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment