Thursday, October 2, 2008

புலிகள் பிரயோகித்த இரசாயன வாயு




வன்னியை மீட்கும் அரச படையினரின் தீவிர இராணுவ நடவடிக்கையில் இதுவரை மன்னார்ப் பிரதேசங்கள் அனைத்தையும் புலிகள் இயக்கத்திடமிருந்து மீளக் கைப்பற்றித் தொடர்ந்தும் வன்னிப் பிரதேசங்களில் பெரும் பகுதியான வன்னி மேற்குப் பிரதேசங்களைக் கைப்பற்றி விட்ட அரச படையினர் தற்போது புலிகள் இயக்கத்தின் கேந்திர நகரங்களான கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நெருங்கி வருகின்றனர்.

இவ்வாறு படு தோல்விகளுக்கு முகம் கொடுத்திருக்கும் புலிகள் இயக்கம் அரச படையினரின் பாரிய இறுதித் தாக்குதலைத் தடுத்து நிறுத்த முடியாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் இவ்வாறு வன்னியின் பெரும் பிரதேசங்களையும் கைப்பற்றித் தொடர்ந்து தீவிர விமானத் தாக்குதல்கள், மல்ரிபரல் பீரங்கித் தாக்குதல்கள், நவீன தாங்கிகள் மற்றும் ஆயுதங்கள் மூலமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் அரச படையினர் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவை நெருங்கி அந்தக் கேந்திர நகரங்களைக் கைப்பற்றத் தயாராக நிலைகொண்டுள்ளனர்.

இதனால், பெரும் பீதிக்குள்ளாகியிருக்கும் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் சிரேஷ்ட தலைவர்களும் இறுதித் தாக்குதல்களுக்காக செய்து வரும் ஆயத்த நடவடிக்கைகள் பற்றி அண்மைக் காலங்களில் வெளியாகிய தகவல்களில், புலிகள் இயக்கம் இறுதிக் கட்டமாக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டு வந்தன. இதனால், வன்னியில் முக்கிய களமுனைகளில் புலிகள் இயக்கம் இரசாயன வாயுவைப் பயன்படுத்தும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுக்கும் வகையில் அரச படையினரும் இரசாயன வாயுத் தாக்குதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

இந்நிலையில்தான் கடந்த 15 ஆம் திகதி அக்கரைப்பற்று பிரதேசத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள பகுதியை நோக்கி முதன் முதலில் குறிப்பிட்டதொரு இரசாயனவாயுத் தாக்குதலை மேற்கொண்டனர். வன்னி யுத்தத்தைப் பொறுத்தவரையில் இவ்வாறு புலிகள் இரசாயன வாயுவைப் பயன்படுத்தி அரச படையினரைத் தாக்கியிருப்பது களமுனைகளில் ஒரு விசேடமான சம்பவம் ஆகும். அக்கரைப்பற்று பிரதேசத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் மீது 15 ஆம் திகதி புலிகளால் ஏவப்பட்ட இரசாயன குண்டு வெடிப்பின்போது அது வெடித்த பகுதியில் செயற்பட்ட படையினரில் 16 பேர் வரையில் இந்த வாயுத் தாக்கத்தால் பல்வேறு அவஸ்தைகளுக்குள்ளாகினர். இது பற்றி பாதுகாப்புத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விபரங்களுக்கேற்ப புலிகள் இயக்கத்தால் ஏவப்பட்ட இரசாயனக் குண்டு வெடிப்பில் பரவிய வாயு காரணமாக மேற்படி படையினர் கடுமையான கண் எரிவு, மயக்கம், இளைப்பு, வாந்தி, ரத்தவாந்தி நினைவு மாறாட்டம் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியதாகத் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து மேற்படி இராணுவத்தினர் உடனடியாக அனுராதபுரம் வைத்தியசாலைக்கும் பின்னர் கொழும்புக்கும் எடுத்துச் செல்லப்பட்டனர். அத்துடன் குறித்த இரசாயன வாயு பற்றிய இரசாயன கூட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அநுராதபுரத்திலும், கொழும்பிலும், இந்த இரசாயன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரசாயன குண்டு வெடிப்பு ஏற்பட்ட ஸ்தலத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வுகளுக்கு மேலதிகமாக வாயுத் தாக்குதலுக்குள்ளான இராணுவத்தினரின் உடலில் ஏற்பட்ட வாயுத் தாக்கங்கள் மற்றும் இராணுவத்தினரின் முறைப்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் மேற்படி இரசாயன வாயு பற்றி விசாரணைகளும் ஆய்வுகளும் நடத்தப்பட்டன. இதற்காக கொழும்பு இரசாயன ஆய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் ஆகியவற்றின் உதவி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இது பற்றி பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் ஒருவர் தெரிவிக்கையில்;

திடீரென்று வெள்ளை நிறத்தில் அடர்த்தியான வாயு எழுந்ததாகவும் உடனே கடுமையான கண் எரிவைத் தொடர்ந்து கண்ணீர் சுரக்க ஆரம்பித்ததாகவும், அந்தப் பாதிப்பைப் பொறுத்த வரையில் கண்ணீர் புகைக்குண்டு வெடிப்பில் ஏற்படக்கூடிய கண் எரிவு கண்ணீர் ஆகியவற்றிலும் மிக கூடுதலான உபாதையை குறித்த இரசாயன வாயு ஏற்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் பாதுகாப்புத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட தகவல்களுக்கேற்ப சம்பவ தினமாகிய 15 ஆம் திகதி அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் படையினர் நிலைகொண்டிருந்த பகுதியில் புலிகள் இயக்கத்தினர் வாயுது தாக்குதலை மேற்கொண்டதாகவும், இவ்வாறு புலிகளால் சீ.எஸ்.எனப்படும் வாயுவைப் பயன்படுத்தி வாயுக் குண்டுத் தக்குதலை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறித்த "சீ.எஸ்'.வாயு பற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்னர் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப குறித்த சி.எஸ்.எனப்படும் வாயு சாதாரணமாக இரசாயன ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் இரசாயன வாயு வகையைச் சேர்ந்தது எனவும் இந்த வாயுவின் தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்படாது எனவும் எவ்வாறாயினும் உடல் வேதனை உட்பட உடல் செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கக் கூடியதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சி.எஸ்.வாயு எதிரிகளால் கைப்பற்றி வைக்கப்பட்டிருக்கும் பணயக் கைதிகளை மீட்பதற்காக எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கைகளின் போதே பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதாகவும் இவ்வாறு பல்வேறு நாடுகளிலும் பணயக் கைதிகளை மீட்கும் பல நடவடிக்கைகளில் இந்த வாயு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சீ.எஸ்.கண்டு பிடிக்கப்பட்டது மற்றும் இரசாயன இயல்புகள் பற்றித் தெரிய வரும் தகவல்களுக்கேற்ப இது அமெரிக்காவில் முதன் முதலாக பென் கார்ஸன், றொஜர் ஸ்ரென்டன் ஆகிய இரண்டு அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகளால் 1928 ஆம் ஆண்டு மிட்லேபறி எனப்படும் அமெரிக்க கல்லூரியின் ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரசாயன ஆய்வின்போது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இது கார்ஸன் மற்றும் ஸ்ரேன்டன் ஆகிய ஆய்வாளர்களின் பெயர்களைக் குறிக்கும் வகையில் சீ.எஸ்.வாயு என வழங்கப்பட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.

இந்த சீ.எஸ்.வாயுவின் இரசாயனக் குறியீட்டுப் பெயர் C10I+5CIN2 என்பதாகும். இந்த சி.எஸ்.வாயு பெரும்பாலும் யுத்தம் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு வியட்நாம்,சைப்பிரஸ், வட அயர்லாந்து, ஈராக், பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் பல்வேறு மோதல்களின் போது சி.எஸ்.வாயு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது வன்னி இராணுவ நடவடிக்கை காரணமாகத் தோல்வியடைந்து தப்பியோடிக் கொண்டிருக்கும் புலிகள் இயக்கத்தினருக்கு அவர்களின் அற்ப ஆட்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் வைத்துக் கொண்டு அரச படையினரின் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது என்பது எவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம். இந்த இயலாத கட்டத்திலேயே புலிகள் இவ்வாறு சீ.எஸ்.வாயுக் குண்டை இராணுவத்தினர் மீது ஏவிவிட்டுள்ளனர்.

லங்காதீப விமர்சனம்: 21.09.2008

No comments:

Post a Comment