Monday, June 7, 2010

கிளிநொச்சி மாவட்டம் திருநகர்ப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்ட படைச்சிப்பாய்

கிளிநொச்சி மாவட்டம் திருநகர்ப் பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டதாக படைச்சிப்பாய் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மேற்படி குடும்பப் பெண் கணவருடன் வீட்டில் படுத்திருந்த சமயம் வீட்டினுள் புகுந்த சிப்பாய் மேற்படி குடும்பப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல் மேற்கொள்ள முயன்றதாகவும் வீட்டுக்காரர்கள் விழித்துக் கொண்டதால் தப்பி ஓடிய படைச்சிப்பாய் அருகிலுள்ள கிணறு ஒன்றில் விழுந்துள்ளதாகவும் ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


அச்சமயம் தான் ஒரு படைச்சிப்பாய் எனவும் தன்னைக் காப்பாற்றும் படியும் அங்கு கூடிய பொதுமக்களிடம் கோரியுள்ளார். அங்கு கூடிய பொதுமக்கள் அவரைக் காப்பாற்ற முடியாது எனத் தெரிவித்து விட்டனர்.


எனினும் சிறிது நேரத்தில் ட்ரக்ரரில் அங்கு வந்த 10க்கும் மேற்பட்ட படையினர் குறித்த படைச்சிப்பாயை மீட்டுக் கொண்டு சென்றுள்ளனர். எனவே ஏனைய படையினரும் அப்பகுதியிலேயே நின்றிருக்கலாம் என மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளதாக ஜீ.ரீ.என் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனிடம் கேட்ட பொழுது மேற்படி சம்பவம் குறித்து தானும் கேள்விப் பட்டதாகவும் மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்

No comments:

Post a Comment