Tuesday, June 8, 2010

யாழ்.சாவகச்சேரிப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய வேளை ஷெல் வெடித்துச் சிதறியது - இருவர் பலி மூவர் படுகாயம்


யாழ் சாவகச்சேரி தனங்கிளப்பு புல்லுக் குளம் பிள்ளையார் கோயிலடியில் குப்பைக்குத் தீ மூட்டிய போது ஷெல் வெடித்ததில் இரண்டு பேர் பலியாகியதுடன்

மூன்று பேர் படுகாயமடைந்து சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை 5 . 30 மணியளவில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தின் போது தனங்கிளப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர்களான கனகசபை பிரகாஷ் (வயது 28), மந்திகை ஆதார வைத்திய சாலை ஊழியரான மணியம் பொன்சேகரா (வயது 36) ஆகியோரே உயிரிழந்தனர்.

சின்னத்தம்பி விஜயரட்ணம் (வயது 60), தேவதாஸ் விவேகானந்தன் (வயது 65), வன்னியசிங்கம் (வயது 58) ஆகியோர் காயமடைந்து ௦ சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் விஜயரட்ணம் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் பற்றித் தெரியவருவதாவது :-

இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கு நடைபெறவிருந்த தனங்கிளப்புப் பிரதேச மக்களின் தேவைகளைக் கேட்டறியும் கலந்துரையாடலுக்காக அப்பிரதேச மக்கள் குறித்த இடத்தைத் துப்பரவு செய்துள்ளனர்.

இந்தச் சுத்திகரிப்புப் பணியில் ஆண்களும் பெண்களுமாக சுமார் 50 பேர் வரையில் ஈடுபட்டிருந்தனர். அங்கு ஒன்று சேர்ந்த குப்பை கூளங்களை ஓரிடத்தில் குவித்து தீமூட்டிய வேளையிலேயே இந்த அனர்த்தம் ஏற்ப்பட்டுள்ளது.



இதேவேளை குப்பை கொளுத்தப்பட்ட இடத்தில் காய்ந்த பட்டுப்போயவிட்ட பூவரசு மரம் இருந்தது என்றும் அதன் கீழேயே குப்பை குவிக்கப்பட்டு எரியூட்டப்பட்டது என்றும் அந்த மரத்தில் "ஷெல்" சிக்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து சாவகச்சேரிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தப் பிரதேசம் சிலமாதங்களின் முன்பே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு மக்கள் மீள்குடியமர அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment