Saturday, June 12, 2010

சென்னையை காப்பாற்ற... நடுக்கடல் யுத்தம்- எந்திரன் ஸ்பெசல்


'இந்த வருடம் ரிலீஸ் நிச்சயம்!' என்று ஷங்கர் தன் இணையதளத்தில் அறிவித்ததில் இருந்து... டிகிரி டிகிரியாக எகிறி வரு கிறது 'எந்திரன்' ஃபீவர். 'என்னதான் நடக்கிறது உள்ளே?' என்று எட்டிப் பார்த்ததில் இருந்து...

ஹீரோ, வில்லன்... இரண்டும் ரஜினியே என்பதால் டப்பிங்கின் போது வசன உச்சரிப்பில் வித்தியாசம் வேண்டுமே, இதனால் இரண்டு விதங்களில் பேசிப் பயிற்சி எடுத்து, ஒலிப்பதிவின்போது இரண்டு குரல் களில் பேசி அசத்தி இருக்கிறார் ரஜினி. உதவிக்குத் தொழில்நுட்பமும் உண்டு!

'உப்புக் கருவாடு... ஊறவெச்ச சோறு...' என்று தியேட்டர்களைத் தடதடக்கவைத்த பாடல்போல ஃபாஸ்ட் பீட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான். டான்ஸ் மாஸ்டர் தினேஷின் நடன இயக்கத்தில் செம துள்ள லும் துடிப்புமாக ஆடி இருக்கிறாராம் ரஜினி!

'சிவாஜி' படத்தில் ரஜினிக்கு மேக்கப் போட்ட பானுதான் 'எந்திரன்' மேக்கப் வுமனும். தவிர, ஐஸ்வர்யா ராய்க்கு மட்டுமே 57 லுக்குகளில் மேக்கப்பாம். யப்பா!

சந்தானம், கருணாஸ் இருவரும் காமெடிக்கு இருக்கிறார்கள். கதைப்படி பேராசிரியர் ரஜினியின் மாணவர்கள் இருவரும். ரஜினி உருவாக்கும் ரோபோ ரஜினி, ஆரம்பத்தில் நல்ல குணங்களுடன் இருக்கும். காதல், கல்யாணப் பிக்கல் பிடுங்கல்கள் இருக்காது என்பதால், ரோபோ ரஜினிக்கு கல்லூரிப் பெண்கள் மத்தியில் செம டிமாண்ட். அலேக்காக அழகிகளை மடக்கும் ரோபோ ரஜினியைக் கவிழ்க்க, 'காய்ந்துகிடக்கும்' சந்தானம், கருணாஸ் மேற்கொள்ளும் முயற்சிகள்தான் காமெடிக் கதகளி. 'நாங்க செய்ற எல்லாத்தையும் உன்னால செய்ய முடியாது!' என்று ரோபோ ரஜினிக்கு இருவரும் சவால்விட்டு உதார்விடுவது உச்சக்கட்ட காமெடிக் குருமா!

'எந்திரன்' க்ளைமாக்ஸ் காட்சி பிரமாண்டத்தின் உச்சமாக இருக்குமாம். எண்ணூரில் அமைந்துள்ள புதிய துறைமுகத்தை நோக்கி பிரமாண்டக் கப்பல் ஒன்று வரும். கப்பல் முழுக்க அடுக்கப்பட்டுஇருக்கும் கன்டெய்னர்களில் வெடி மருந்துகள். கப்பலைச் செலுத்துவது வில்லனான ரோபோ ரஜினி. கப்பல், துறைமுகத்தில் மோதி வெடித்தால், ஒட்டுமொத்த சென்னையும் பஸ்பம் ஆகிவிடும். சென்னையை அழிக்கும் நோக்கத்தோடு வரும் ரோபோ ரஜினி யைத் தடுக்க, நடுக்கடலில் அதோடு மோதுவார் பேராசிரியர் ரஜினி. வெடிமருந்தை நடுக்கடலிலேயே பற்றவைத்து சென்னையைக் காப்பாற்றுவதுதான் க்ளைமாக்ஸ்!

படத்தில் ஒன்றல்ல, இரண்டல்ல... எக்கச்சக்க வில்லன் ரோபா ரஜினிக்கள் உண்டு. ரோபோ ஃபார்முலா அறிந்துகொண்டு ஏகப்பட்ட ரோபோ ரஜினிக்களை உருவாக்குவார் வில்லன் டேனி டெங்ஷோபா. அது தயாராகும் தொழிற்சாலைக்கே சென்று அவற்றை அடித்துத் துவம்சம் செய்ய வேண்டிய கடமை நல்ல ரஜினிக்கு. ஹாலிவுட் படம் 'ஐ ரோபாட்' போல முழுக்க முழுக்க அனிமேஷன் எலெக்ட்ரானிக்ஸில் எக்கச்சக்க ரஜினிகள் திரையில் சாகசம் செய்வார்கள்!

அழகு மட்டுமல்ல; ஐஸ்வர்யா இதில் அதிரடியும் காட்டுகிறார். கதைப்படி பேராசிரியர் ரஜினிக்கு கராத்தே தெரியும். ரோபோ ரஜினியிடம் இருந்து தப்பிக்க ஐஸ்வர்யாவுக்கு கராத்தே கற்றுத் தருவார் அவர். இதற்காக ரஜினி, ஐஸ்வர்யா இருவருமே 10 நாட்கள் காராத்தேவின் அடிப்படை வித்தைகளைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்!

'அரசியலில் என்றைக்குமே நான் நிராயுதபாணி', 'வாழ்க்கை கொடுப்பவன் வாக்காளன்... வாய்க்கரிசி போடுறவன் வேட்பாளன்', 'அர்த்த சாஸ்திரம் உங்க வழி.. தர்ம சாஸ்திரம் என் வழி' இவையெல்லாம் படத்தில் ஆங்காங்கே ரஜினி அடிக்கும் பஞ்ச் டயலாக்குகள்!

ஜூலை 10 அல்லது ஆகஸ்ட் 10... 'எந்திரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தத் திட்டம். ஸ்பாட்.... அநேகமாக, துபாய்!

ரஜினியின் ஆராய்ச்சிக்கூட செட்டின் மதிப்பு ஐந்து கோடி ரூபாய். அலுமினிய ஷீட்டுகளால் கிழக்கு கடற் கரைச் சாலையில் பிரமாண்டமாக இந்த செட்டை இழைத்திருக்கிறார் கலை இயக்குநர் சாபு சிரில்!

முதல்வருக்கு பெப்ஸி நடத்திய விழாவுக்கு சென்னை வந்த அமிதாப், 'எந்திரன்' ஷூட்டிங் ஸ்பாட்டில் எட்டிப்பார்த்து இருக்கிறார். அப்படியே அவரை ஒரு காட்சியில் நடிக்கவைத்துவிட்டார் ஷங்கர்!

'எந்திரன்' டப்பிங் முழுவதும் முடிந்த பின் திருப்பதி சென்று ஏழுமலையானுக்கு விசேஷப் பூஜை செய்யும் திட்டத்தில் இருக்கிறார் ரஜினி!


நன்றி ஆனந்த விகடன்

No comments:

Post a Comment