Thursday, June 10, 2010

டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை பொலிஸ் கமிஷனர்



சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், செய்தியாளர்கள் இன்று டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் ஒரு குற்றவாளி என்று கூறியுள்ளார்.

இலங்கையில் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் அமைச்சராக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா. இவர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் இந்தியா வந்துள்ளார்.

1986ம் ஆண்டு நவம்பர் 1 ம் தேதி சென்னையில் டக்ளஸ் தேவானந்தா தங்கி இருந்த போது, சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றார். மேலும் 4 பேரை காயப்படுத்தினார்.

இந்த சம்பவத்தில் டக்ளஸ் கைது செய்யப்பட்டார். சில மாதங்கள் கழித்து ஜாமீனில் அவர் வெளியே வந்தார்.

வெளியே வந்த பிறகு, 1988 ம் ஆண்டு நவம்பர் மாதம் 10 வயது சிறுவனை கடத்திச் சென்று, 7 லட்சம் கொடுத்தால் விடுவேன் என்று மிரட்டினார் என்று கீழ்ப்பாக்கம் பொலிஸில் டக்ளஸ் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

1989 ம் ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு அவர் இலங்கைக்கு தப்பி ஓடிவிட்டார்.

இலங்கையில் கைது செய்து, இந்தியாவுக்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில், இலங்கையோடு இந்தியா சில ஒப்பந்தங்களை ஏற்படுத்தியதால், டக்ளஸ் கைது நடவடிக்கையில் மேல்கொண்டு முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவுக்கு வந்துள்ளார். அவரை கைது செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தமிழக மக்கள் உரிமைக்கழகச் செயலரும் வக்கீலுமான புகழேந்தி கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரனிடம், டக்ளஸ் தேவானந்தா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சென்னை பொலிஸ் கமிஷனர் இராஜேந்திரன், டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி. அவர் மீது மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது குறித்து டில்லி பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளோம். மேற்கொண்டு நடவடிக்கைகளை டில்லி பொலிஸார்தான் பார்க்க வேண்டும். டில்லி பொலிஸார் கேட்டுக்கொண்டால், தமிழகத்தில் இருந்து சிறப்பு காவல்படையை அனுப்பி உதவி செய்யப்படும். ஆனால் டில்லி பொலிஸார் தான் கைது நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment