Wednesday, June 9, 2010

குமரன் பத்மநாதனுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை – கேஹலிய



கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளியுறவுத்துறை தலைவர் குமரன் பத்மநாதனுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியம் தென்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் அடிப்படையில் அண்மையில் உள்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வியளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பத்மநாதனுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க தீர்மானித்தால் அது ஆச்சரியப்படத்தக்க விடயம் இல்லை என தெரிவித்துள்ளார்.

செவ்வியின் போது கேபி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மநாதன் ஒரு காலத்தில் அரசன் போல வாழ்ந்து வந்தவர். எனினும் தற்போது அவர் தமது பெருமைகள் அனைத்தையும் இழந்து சாதாரணமாக வாழ்ந்து வருவுதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் விடுவிக்கப்படுவாரா? என எழுப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போதே பொது மன்னிப்பு வழங்கும் சாத்தியம் குறித்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்..

இதற்கிடையில் இதன் போது கேபிக்கு அரசாங்க பதவி எதுவும் வழங்கப்படுமா என எழுந்த கேள்விக்கு பதில் வழங்கிய அவர் இது குறித்து அரசாங்கத்தின் உயர் மட்டம் தீர்மானிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கேபிக்கு தமது குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய அமைச்சர் தமது இயக்கத்துக்கு எதிராக செயற்பட்டு தற்போது அவர் தண்டணையை அனுபவித்து வருவதாகவும் அவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விடுதலைப்புலிகளின் பல்வேறு தரப்புக்களையும் அரசாங்கத்தினால் முடக்கமுடிந்ததாகவும் கேஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment