Thursday, November 20, 2008

கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள்: முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர



கொழும்பு மலர்ச்சாலையில் சிறிலங்கா படையினரின் 250 உடலங்கள் வைக்கப்பட்டுள்ளன என்றும் காயமடைந்த 405 படையினர் பேர் கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை மங்கள சமரவீர நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

பூநகரியை சிறிலங்கா படையினர் மீண்டுமொரு தடவை தம்வசப்படுத்திக்கொண்டதன் மூலம் போரில் வெற்றியடைவது போன்ற மாயையை அரசு காட்ட முயற்சிப்பதாக தெரிவித்த முன்னாள் அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு அமைப்பாளருமான மங்கள சமரவீர

பூநகரி படையினர் வசமானதை நாம் குறைத்து மதிப்பிடவில்லை. அதன் பெருமை எமது படையினருக்கு உரியது. ஆனால், பூநகரி கைப்பற்றப்பட்டது இது முதல் தடவையல்ல.

15 வருடங்களுக்கு முன்னர் 1993 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் நாளும் விடுதலைப் புலிகளிடமிருந்து பூநகரி கைப்பற்றப்பட்டது. அப்போதும், புலிகள் தப்பியோடுவதாக அரச ஊடகங்கள் பெரிதாக ஆர்ப்பரித்தன. பின்னர் என்ன நடந்தது. அடுத்தடுத்து பெரும் இழப்புக்களை அரச படையினர் எதிர்கொண்டனர். இன்னும் எவ்வளவு தூரம் படையினர் முன்னேறினாலும் கூட இந்த போரில் முழுமையான வெற்றியைப்பெற முடியாது. இதனை மகிந்த ராஜபக்ச உணர்ந்தே இருக்கின்றார்.

பூநகரி வெற்றியை தமது அரசியல் இருப்பை உறுதி செய்து கொள்வதற்கான உத்தியாக மகிந்த ராஜபக்ச பயன்படுத்தப் போகின்றார். டிசம்பர் 9 ஆம் நாளுக்குப்பின்னர் எந்த வேளையும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். இதனை நான் உறுதியாகக் கூறுகின்றேன்.

ஆளும் தரப்பிலிருந்து பலர் வெளியேறவிருக்கின்றனர். போரைக்காட்டி அடுத்த தேர்தலில் மக்கள் ஆணையை கோரும் ஒரு நாடகத்தை அரசு மேடையேற்றவிருக்கின்றது.

மகிந்த ராஜபக்சவும் அவரது சகோதரர் பசில் ராஜபக்சவும் இந்தியாவுக்குச் சென்று பேசிய உண்மையான தகவல்கள் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. புதுடில்லியின் அழுத்தம் காரணமாக அரசு மிக விரைவில் போர் நிறுத்தத்துக்கு தயாராகி வருகின்றது. அரச தலைவர் அதற்கு தக்க தருணத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்.

போர் நிறுத்தம் செய்யப்படுவதனை நாம் ஒருபோதும் எதிர்க்க மாட்டோம். அதனை வரவேற்கின்றோம். போரின் மூலம் எதுவித பயனையும் அடைய முடியாது. போர் நிறுத்தத்தினை செய்து அடுத்த பணியாக சமகாலத்தில் அரசியல் தீர்வு யோசனையை அரசு முன்வைக்க வேண்டும்.

போரின் மூலம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணவே முடியாது. போரின் மூலம் புலிகளை முற்றுமுழுதாக தோற்கடிக்கவும் முடியாது இந்த யதார்த்தத்தை அரசு உணர்ந்து செயற்பட வேண்டும்.

இந்த வாரத்தில் மட்டும் போர் முனையில் கொல்லப்பட்ட 250 படையினரின் உடல்கள் ஜயரட்ன மலர்ச்சாலைக்கு கொண்டுவரப்பட்டன. காயமடைந்த படையினரில் 235 பேர் தேசிய மருத்துவமனையிலும் 85 பேர் களுபோவில மருத்துவமனையிலும் 90 பேர் ஜயவர்த்தனபுர மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உண்மைத்தகவல்களை பாதுகாப்புத்தரப்பு வெளியிடாமல் மறைத்து வருகின்றது.

நாட்டு மக்கள் இன்று ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். போர் மாயையில் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு பகீரதப் பிரயத்தனத்தில் அரசு ஈடுபாடு காட்டி வருகின்றது. ஆனால், அதில் வெற்றி காண முடியாது என்பதை உணர்ந்த நிலையில் தான் போரையே காரணமாக வைத்து நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல அரச தலைவர் தீர்மானித்துள்ளார்.

டிசம்பர் 9 ஆம் நாளுக்குப்பின்னர் எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம். பொதுத் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்கத் தயாராகுமாறு அரச தலைவரே ஆளும் தரப்பினருக்கு அறிவுறுத்தியிருக்கின்றார்.

ஜனவரி மாதத்துக்குப் பின்னர் பெரும் சவாலை அரசு எதிர்கொள்ளவிருக்கின்றது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் பொருட்டே பொதுத் தேர்தலுக்கு செல்லத்தயாராகி வருகின்றது என்றார் அவர்.

ஆதாரம்: தினக்குரல்

No comments:

Post a Comment