Wednesday, November 19, 2008

போர்நிறுத்தத்துக்கு மறுப்பு ஏன்?



2009ஆம் நிதி ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாவது வாசிப்புக் கடந்த வாரம் நாடாளு மன்றத்தில் நிறைவேறிவிட்டது. 42 மேலதிக வாக்குகளால் நாட்டின் உத்தேச - வரவு செலவுகள் ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டத்தின் மீதான இறுதிக்கட்ட வாக்கெடுப்பு அடுத்த மாதம் எட்டாம் திகதி நடைபெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவும் அநேகமாக அரசுப் பக்கத்துக்குச் சார்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட கையோடு, சிறு இடைவெளியில் தேர்தல் நடைபெறலாம் என்ற பேச்சு அடிபடத் தொடங்கிவிட்டது. தேர்தல், நாடாளுமன்றத்துக்கா அல்லது மாகாண சபைகளுக்கா என்பதில் நிலைமை தெளிவாகவில்லை. ஊகங்கள் வெவ்வேறு விதமாக வெளிவந்தாலும் நாடா ளுமன்றத் தேர்தலே நடைபெறும் என்று மிகப் பலரும் கருதுகிறார்கள்.
பிறரின் தயவின்றித் தமது ஆளுங்கட்சிக்கு தனித்து அதிகப் பெரும்பான்மையைப் பெற்று, ஆட்சி நடத்த வேண்டும் என்பதே ஜனாதிபதியின் விருப்பம். அப்போதுதான், தமது பதவிக்காலத்தையும் அடுத்த தவணைக்கும் நீட்ட வாய்ப்பு வரும் என்பது அவரது உள்ளார்ந்த திட்டம் என்று அரசியல் அவதானிகள் எதிர்வு கூற ஆரம்பித்துவிட்டார்கள்.
போரின் வெற்றி அதற்கு உதவும் என்ற நோக்குடனேயே, தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கைகள் தீவிர மாக்கப்பட்டன என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல. அதன் பொருட்டே எப்போதும் இல்லா தவாறு பாதுகாப்புக்கான உத்தேச செலவுக்கு 17,706 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது என்பது வெள்ளிடைமலை. எப்போதோ தெரிந்த விடயம்.
பாதுகாப்புச் செலவினத்தை அதிகரிக்கும்போது, அந்தச் சுமை பொதுமக்களின் தலைமீதே விழுகிறது; விழும். எனினும் தமிழர்களை ஒடுக்குவது என்ற இனவாதக் காற்றைச் சிங்கள மக்களைச் சுவாசிக்கச் செய்ததன் மூலம், தம்மீது விழும் வாழ்க்கைச் செலவுப் பளுவை அவர்களை மறக்கச் செய்து தமது ஆட்சியை நீட்டுவதற்கு அரசாங்கம் வழிசமைத்திருக்கிறது.
இத்தகைய ஒரு பின்னணியில் -
மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து, ஜனாதிபதி தமது செலவுக்கு ஒதுக்கி உள்ளார் என்று ஜே.வி.பி. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டி உள்ளார். வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசியபோது காமினி ரத்னாயக்கா எம்.பி. இதனைப் புட்டுக்காட்டியிருக்கிறார்.
ஜனாதிபதியின் கைக்குச் செல்லும் இந்தப் பணத்தில் ஒரு பகுதி பாதுகாப்புச் செலவுக்கு - போரைத் தொடரும் தேவைகளுக்கு - போய்ச் சேரும் என்று நிச்சயமாக நம்பலாம். எந்தளவு பெருந்தொகைப் பணத்தைச் செலவிட்டும், மக்கள் மீது எத்துணை அதிக பளுவைச் சுமத்தியும், போரை வென்றுவிட வேண்டும் என்பது அரசின் இலக்காக உள்ளது என்பதனை இந்த விவகாரம் தொட்டுக்காட்டுகிறது.
போரில் வெற்றி பெறுவது என்ற மயக்க மருந்தைப் பெரும்பான்மை மக்கள் மீது தெளித்து தமது எண்ணத்தை நிறைவேற்றினால், தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்து எந்தவகைச் சர்வாதிகாரத்திலும் ஈடுபடமுடியும். மக்கள் தட்டிக் கேட்க வலுவற்றுச் சாய்ந்து போவார்கள் என்ற திட்டமும் இதில் அடக்கம்.
போர் நிறுத்தம் ஒன்றை அறிவிக்க விருப்பமில்லாது, ஜனாதிபதியும் அமைச்சர்களும் பலவகையான வெவ்வேறு வியாக்கியானங்களைத் தமது வாய்க்கு வந்தது போன்று கூறி வருவதன் பின்புலச் சிந்தனை, இடையில் - உரிய காலத்துக்கு முந்திய - ஒரு பொதுத் தேர்தலை நடத்தித் தமது ஆளுங்காலத்தை நீடித்து பதவிகளை நிரந்தரமாகத் தக்கவைத்து மக்கள் பணத்தினைச் சுரண்டுவதுதான் என்பதனை இப்போது புரிந்து கொள்ளும் நிலையில் சிங்கள மக்கள் இல்லை. அந்த அளவுக்கு அவர்களை இனவா தத்தால் திட்டமிட்டு, மயக்கிச் செயற்படுகிறது இந்த அரசும் அதன் தலைமையும்.
போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஒப்புக்கொண்டால், அதிகாரத்தில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்புப் பறிபோகலாம் என்ற அச்சம் அரசுக்கு. அதுவே ஜனாதிபதி இந்தியாவுக்குச் சென்றபோது போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று செருக்குடன் உரத்துக் கூறியதன் தாற்பரியம்.
இந்தியாவும் ஏனைய நாடுகளும், இலங்கை அரசின் சரியான உள்ளக் கிடக்கையைப் புரிந்துகொள்ளக் காலம் செல்லலாம். உண்மையைப் பின்னர் அறிந்துகொள்ளக் காத்திருக்காமல், இப்போதே இதனைக் கவனத்தில் கொள்வது நல்லது.
போர் நிறுத்தத்திற்கு இலங்கை அரசு மறுத்து வருவதன் உள்ளார்ந்த சூக்குமம் என்ன என்பதனைக் கண்டறியும் தன்மை, ஜனநாயகத்தைக் கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு எப்போது வரும்? போரினால் தமிழர்களில் பெரும் எண்ணிக்கையினர் அழிந்தொழிந்த பின்னர் மனிதாபி மானம் பிறந்து பயனில்லையே!
மிகக் குறிப்பாக, தன்னை உத்தம ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா, இலங்கை ஆட்சியாளர்களின் உள்நோக்கத்தை அறிந்து போர்நிறுத்தத்துக்கு இசைய வைத்து தமிழர் அழிவைத் தடுக்கக் கூடாதா?
தனது நாட்டின் தமிழகத்தின் தொப்புள் கொடிகளே இங்கு சாகிறார்கள் என்று உணர்ந்து மனிதாபிமானத்துடன் செயற்பட மனங்கொள்ளக்கூடாதா?
இராணுவ நடவடிக்கைகள் நடைபெறும்போதே, சமாந்தரமாக அரசியல்தீர்வு ஒன்று முன்வைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இலங்கையில் போர் நடவ டிக்கையை ஆதரிக்கமுடியும் என்று கொள்கை வகுத்தி ருப்பதால், இந்திய மத்திய அரசு இதுவிடயத்தில் உரிய உணர்வுடன் செயற்படமாட்டாது என்றே நம்பலாம். இதனைத் தமிழகத் தலைவர்கள் புரிந்துகொண்டு மத்திய அரசுக்கு உகந்த விதத்தில் அழுத்தம் கொடுக்கவேண்டும். ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், பேச்சுகள், அறிக்கைகள் மத்திய அரசை உசுப்புமா என்பது சந்தேகமே!

உதயன்

No comments:

Post a Comment