Tuesday, November 25, 2008

பெல்ஜியம் மீது தாக்குதல்? - வீடியோ பயங்கரவாதம்


பெல்ஜியத்தின் பிரதான செய்தி நிலையங்களின் ( VRT, VTM) முகவரிகளுக்கு, ஒரு டி.வி.டி. தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பெல்ஜியத்தின் மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கும் வீடியோ செய்தி அது. நான்கு நிமிடங்களே ஓடும் அந்த வீடியோ படத்தில், அல் கைதா பாணியில் முகமூடியணிந்த மூன்று நபர்கள், சைகைகள் மூலம் சொல்ல வரும் செய்தி, நெதர்லாந்து மொழியில் (பெல்ஜியத்தின் தேசிய மொழிகளில் ஒன்று) உப தலைப்புகளாக காட்டப்படுகின்றது. செய்தி நிலையங்கள், ஆரம்பத்தில் இந்த வீடியோ குறித்து கவனமெடுக்காவிட்டாலும், உடனடியாக காவல் துறையிடம் கையளித்து விட்டன. இன்று நெதர்லாந்து, பெல்ஜிய தொலைக்காட்சி சேவைகள் அந்த வீடியோவை ஒளிபரப்பி விட்டதாலும், ஏற்கனவே நெதர்லாந்து மொழி இணையங்களில் உலாவுவதாலும், தமிழ் பதிவுலக வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகின்றது.



வீடியோ செய்தியின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு

அந்த வீடியோ மடல், ஏற்கனவே நியூ யார்க், மாட்ரிட், லண்டன், ஆகிய நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புகளை மேற்கோள் காட்டி ஆரம்பமாகின்றது: "பெல்ஜிய மக்கள் சரித்திரத்தில் இருந்து பாடம் படிக்க வேண்டும். நீங்கள் வாழ்வதற்காக அவா கொண்டிருப்பதைப் போல, நாம் சாவதற்காக அவா கொண்டுள்ளோம். எமது பெண்களையும், குழந்தைகளையும் கொலை செய்யும் உங்கள் மீது நாம் இரக்கம் கொள்ள மாட்டோம்."

அண்மையில் பெல்ஜிய அரசு, ஆப்கானிஸ்தானுக்கு படைகளையும், F-16 யுத்த விமானங்களையும் அனுப்பி வைத்தமை குறிப்பிடப்படுகின்றது: "உங்களது அரசாங்கம் சொந்த நலன் கருதி எடுக்கும் முடிவுகளால், உங்கள் இரத்தமும் ஆறாக ஓடும் என்பதை மறக்க வேண்டாம். இதிலிருந்து தப்ப ஒரேவழி, பெல்ஜிய அரசு தனது படைகளை, ஆப்கானிஸ்தானில் இருந்தும், பிற முஸ்லீம் நாடுகளில் இருந்தும் திருப்பி அழைக்குமாறு, நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். உங்கள் அரசின் செயல்களுக்கு நீங்களும் பொறுப்பு."

பெல்ஜிய இணையத்தளமான "Indymedia België" க்கு, கடந்த வியாழன் இந்த டி.வி.டி. கிடைத்த போதும், அதன் ஆசிரியர் பீடம் அனுப்பியவர்களின் நோக்கம் தெரியாததால் பிரசுரிக்க மறுத்து விட்டது. யாரும் இது போன்ற வீடியோ தயாரிக்கலாம் என்ற நிலையில், சில மோசடிக்காரரின் ஏமாற்று வேலையாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. உண்மையான பயங்கரவாதிகள் எப்போதாவது முன்கூட்டியே அறிவித்து விட்டு குண்டுவைப்பார்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

No comments:

Post a Comment