Friday, May 21, 2010

விடுதலைப் புலிகள் இயக்க போராளி கொடூரக் கொலை - படத்தால் பரபரப்பு




கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கப் போராளி ஒருவரை இலங்கை ராணுவத்தினர் கொடூரமாக கொலை செய்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிர்வு உள்ளிட்ட ஈழத் தமிழ் இணையதளங்களில் இந்த படங்கள் வெளியாகியுள்ளன. இவர் யார், எந்தப் பகுதியில் இந்த கொடுமை நடந்தது, எப்போது நடந்தது என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட போராளி இளைஞரை உயிருடன் பிடித்து மிகக் கடுமையாக சித்திரவதை செய்துள்ளதுபோலத் தெரிகிறது. தென்னை மரத்தில் வைத்து அந்த இளைஞரை கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்தது போல தெரிகிறது.

ஒரு புகைப்படத்தில் கையில் கத்தியுடன் ஒருவன் நிற்கிறான். அந்த போராளியின் உடலில் ரத்தம் ஓடியுள்ளது. குத்துயிரும் குலையுருமாக காணப்படும் அந்த இளைஞர் பின்னர் பிணமானதாக தெரிகிறது. அந்த இளைஞரின் ரத்தம் தோய்ந்த உடலில், விடுதலைப் புலிகள் இயக்க கொடி போர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து ஈழத்தில் சிங்கள படையினரின் வெறியாட்டம் தொடங்கியது. அன்று ஓடத் தொடங்கிய தமிழர்களின் ரத்த ஆறு, மே மாதம் 18ம் தேதி வரை நிற்காமல் தொடர்ந்தது. பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கணக்கே இல்லாமல் கொன்று குவிக்கப்பட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த மாபாதக படுகொலைகள் குறித்த உண்மை இதுவரை தெரியாமலேயே மறைக்கப்பட்டு விட்டது. போரின் உச்சகட்டமாக முள்ளிவாய்க்காலில் மட்டும் கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் மகா கொடூரமாக கொத்து குண்டுகளை வீசி கூண்டோடு கொல்லப்பட்டனர்.

அப்போது நடந்த சம்பவங்கள் குறித்தும், சிங்களத்தவரின் கொடூரங்கள் குறித்தும் சமீப காலமாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்தநிலையில் இளைஞர் ஒருவரை சித்திரவதை செய்து கொன்ற புகைப்படங்கள் வெளியாகி அதிர வைத்துள்ளது.
இது குறித்து கருத்துரைத்திருக்கும் தடவியல் நிபுணர் ஒருவர், குறிப்பிட்ட அரசியல் போராளியின் மூளையின் சில பகுதிகள் அவரது கழுத்தில் வீழ்ந்துகிடப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment