Thursday, April 15, 2010

அடுத்த இராணுவத் தளபதியும் அமெரிக்காவிற்கு போகிறாராம்!


அமெரிக்காவுக்குத் தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவிடம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க உள்துறைத் திணைக்களம் என்பன விசாரணை நடத்தத் தயாராகி வருவதாக ராஜதந்திரத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் தனது அமெரிக்கக் குடியுரிமையைப் புதுப்பிக்கச் சென்ற பாதுகாப்புச் செயலாளரிடம் அமெரிக்க உள்துறைத் திணைக்களம் விசாரணை நடத்திய போதிலும் அவர் அதனைப் பகிரங்கப் படுத்தவில்லை.

பின்னர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்கா சென்றிருந்தபோது அமெரிக்க உள்துறைத் திணைக்களம் விசாரணைகளை நடத்த அதன் அதிகாரிகள் அழைப்பு விடுத்தபோது அவர் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் இலங்கை திரும்பியதாகத் தெரிவிக்கப் பட்டிருந்தது.

இதன் பின்னர் சிறீலங்காவின் இராணுவத் தலைவர் ஒருவர் அமெரிக்காவுக்கு இம் முறையே விஜயம் செய்கின்றார். இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவின் மூன்று சகோதரர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.

இவர்கள் ஹியுஸ்டன், பில் டெல்பியா மற்றும் சிக்காகோ நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிக்காகோ நகரில் வசிக்கும் சகோதரரின் பிள்ளை ஒருவரின் திருமணம் எதிர் வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் கலந்து கொள்வதற்காகவே ஜெகத் ஜெயசூரிய அமெரிக்கா செல்லவுள்ளார் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment